பக்கம் எண் :

232யுத்த காண்டம் 

எத்தேவரையும்   -  எல்லாத்  தேவர்களையும்;  (தோற்று  ஓடச்
செய்ததால்)  பின்பு  அலால்  மற்று  -  (அவர்களின்)  பின்புறத்தை
அல்லாமல்;  முகங்கண்டு  அறியாத  - (எதிர்வந்த) முகத்தைக் கண்டு
அறியாத;  ஈட்டான்  -  வலிமை  உடையவன் ஆகிய இந்திரசித்தன்;
அத்தேரினை  ஏறி  -  அந்தத்  தேரின்  கண்  ஏறிக்கொண்டு; அது
ஒப்பன  ஆயிரம்  தேர்
 -  அந்தத்  தேரினைப்  போன்ற ஆயிரம்
தேர்கள்; சேமமதாய் வர - பாதுகாவலாய் வர; உள்ளம் வெம்போர்ப்
பித்து  ஏறினன்  என்ன
 - மனத்தில் கொடுமையான போர்ப் பித்துக்
கொண்டவன்  என்று  சொல்லும்படியாக;  நடந்தனன் - போர்க்களம்
நோக்கி நடந்தான்.
 

                                                  (23)
 

8025.

அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் ‘அது நாற்பது வெள்ளம்’ என்னச்
சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்கவல்லார்.

 

அன்னானொடு   - அந்த இந்திரசித்தனோடு; போயின தானை -
(உடன்)   சென்ற  படைகளின்  அளவை;  என்னால்  அளந்து  கூற
அரிதேனும்
- என்னால் இவ்வளவு என்று அறுதியிட்டு அளந்து கூறல்
அருமையானதென்றாலும்;  இயம்பு  வான்மீகன்  என்னும் - (பிறரால்)
சிறப்பித்துச் சொல்லப்படுகிற வான்மீகி என்கிற; நல்நான் மறையான் -
சிறப்புடைய   நான்கு  வேதங்களையும்  கற்றறிந்த  முனிவன்;  அது
நாற்பது  வெள்ளம்  என்னச்  சொன்னான்
- அச்சேனையின் அளவு
நாற்பது  வெள்ளம்  என்று  கூறினான்;  அஃது  உணர்ந்து தொகுக்க
வல்லார்
 -  அச்சேனையின்  (அளவை) அறிந்து தொகுத்து உரைக்க
வல்லவர்கள்; பிறர் யார் - அவனன்றிப் பிறர் யாருளர் என்றவாறு.
 

இயம்பு  வான்மீகன்  -  முதல்  நூலை  இயம்பிய வால்மீகி முனிவர்
எனினுமாம்.
 

                                                  (24)
 

8026.

தூமக் கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும், அந் நெடுந் தேர் மணி ஆழி காக்க,