குழந்தையாய் இருக்கையில் இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று எண்ணிப் பிடிக்கப் பாய்ந்தபோது, இந்திரன் அவனைத் தன் வச்சிராயுதத்தால் அடிக்க அதனால் கன்னம் சிதைந்து அனுமன் என்னும் இப்பெயர் இந்திரனால் இடப்பட்டது என்பது கதைச் செய்தி. | (32) | | 8034. | என்று, அவன் இறைஞ்சினன்; இளைய வள்ளலும், ‘நன்று’ என மொழிதலும், நணுகினான் அரோ- வன் திறல் மாருதி, ‘இலங்கைக் கோ மகன் சென்றனன் இளவல்மேல்’ என்னும் சிந்தையான். | என்று - என்று கூறி; அவன் இறைஞ்சினன் - அந்த வீடணன் வணங்கினான்; இளைய வள்ளலும் - இளைய வள்ளலாகிய இலக்குவனும்; நன்று என மொழிதலும் - நல்லது என்று கூறிய உடனே; இலங்கைக் கோமகன் - இலங்கை அரசனாகிய இராவணனுடைய மகன்; இளவல் மேல் சென்றனன் என்னும் - இளவலாகிய இலக்குவன் மீது செல்லுகிறான் என்று எண்ணுகிற; சிந்தையான் - மனத்தினை உடையவனான; வன்திறல் மாருதி - மிகு வலி உடைய அனுமன்; நணுகினான் - (இலக்குவனை) நெருங்கி வந்தான். அரோ - அசை. | (33) | | 8035. | கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா, மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங் காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ, | கோத்து எழு - (போருக்கு உரிய படைக்கலங்களைக்) கோத்து எடுத்துகொண்டு எழுகின்ற; இராவணி - இராவணன் மகனாகிய இந்திரசித்தனது; தோற்றமும் துணிபும் நோக்குறா - தோற்றத்தையும் துணிவையும் பார்த்து; கூற்றமும் கட்புலம் புதைப்ப - (அனுமன் தன் விரைவு கண்டு) இயமனும் (அஞ்சிக்) கண்களை மூடிக்கொள்ளுமாறு; மேல்திசை வாயிலை விட்டு - (தான் இருந்த இலங்கையின்) மேற்குத் திசை வாயிலை விட்டு; வெங்கடுங்காற்று என - கொடிய வேகமான காற்றுப்போல; கடிதின் வந்து அணுகினன் - விரைந்து (இலக்குவனிடம்) வந்து சேர்ந்தான். | (34) |
|
|
|