| 8036. | அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல் துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்; செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன், சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையே. |
முன்னரே - முன்பே; அங்கதன் ஆண்டையான் - அங்கதன் (இலக்குவன் இருந்த) அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்; துங்கவன் தோளினார் அயல் எவரும் சுற்றினார் - உயர்ந்த வலிமையான தோள்களை உடைய பிற வானர வீரர்கள் அனைவரும் (இலக்குவனுக்குத் துனணயாக அவனைச்) சுற்றிச் சூழ்ந்தனர்; சங்க நீர்க்கடல் எனத் தழீஇய தானையே - சங்குகள் நிறைந்த நீரையுடைய கடல் போல (இலக்குவனைக்) குரங்குச் சேனை சூழ்ந்து நிற்க; செங்கதிரோன் மகன் - சிவந்த கதிர்களை உடைய கதிரவன் மகனாகிய சுக்ரீவன்; முன்பு சென்றனன் - (இலக்குவனுக்கு முன்னால்) போரிடச் சென்றான். |
(35) |
இரு படைகளும் பொருதல் |
| 8037. | இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும் பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின வருவன போல்வன்-மனத்தினால் சினம் திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே. |
மனத்தினால் சினம் திருகின - மனத்தில் சினம் முதிர்ந்தவையாகி; எதிர் எதிர் செல்லும் தானையே - எதிர் எதிராகச் செல்லும் (அரக்கர் படை, குரங்குப் படை என இருபக்கத்துப்) படைகளும்; பொருதொழில் வேட்டு- போர்த் தொழிலை விரும்பி; ஆர்த்துப் பொங்கின எழுந்து - பேரொலி செய்து பொங்கி எழுந்து; இரண்டு திக்கினும் - இரண்டு திசைகளில் இருந்தும்; இருதிரைப் பெருங்கடல் - பெரிய அலைகள் உடைய பெருங் கடல்கள் (இரண்டு); வருவன போல்வன - வருவனவற்றை ஒத்தன. |
(36) |
| 8038. | ‘கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து, எண்ணினால் பெறு பயன் எய்தும், இன்று’ எனா, நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்- விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே. |