பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 373

8257.‘மீளாத வேதம், முடிவின்கண், நின்னை
     மெய்யாக மெய்யின் நினையும்;
“கேளாத” என்று “பிற” என்று, சொன்ன
     கெடுவார்கள் சொன்ன கடவான்,
மாளாத நீதி இகழாமை நின்கண்
     அபிமானம் இல்லை, வறியோர்;
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?
 

மீளாத  வேதம் - (மெய்யில்  இருந்து  விலகி)  மீளுதல் இல்லாத
வேதங்களின்;  முடிவின்   கண்  -  முடிபொருளாய்  உள்ள  (வேத
சிகையாய்  விளங்கும்)  உபநிடதங்கள்;  நின்னை - உன்னை  (பற்றிக்
கூறும்  இடத்து);  மெய்யாக - உண்மைப் பொருளாகக் கொண்டு (உள்
பொருள்  என்று); மெய்யின் நினையும் - உண்மை மெய்யுணர்வாகிய
பதிஞானத்தால்   ஆய்ந்து   கூறும்; கேளாத  என்று  -  (அவ்வாறு
இருக்கும்  போது) (நான் கடவுளைக் கண்ணால் கண்டுள்ளேன்  என்று
ஒருவர்  கூறும்கூற்றுக்)  கேள்விப் படாத (கூற்று) என்றும்; பிற என்று
சொன்ன
 -  எனவே  இக்கூற்று  வேறு  காரணத்தால்  கூறப்பட்டது
(கடவுள்  உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று; கெடுவார்கள்
சொன்ன
 -  அறிவில்லாத  நாத்திகர்கள்  சொன்னதாகும்; கடவார் -
தாங்கள்   கூறிய   கூற்றினைக்  கடவாது  அவர்கள்; மாளாத  நீதி
இகழாமை   நின்கண் அபிமானம்  இல்லை
 -  (ஒரு  பொழுதும்)
பழுதுபடாத  (சாத்திர)  நீதி  முறை  பிறழாமலும்,  உன்னிடம்  பக்தி
செலுத்தாமலும்  கெட்டு அழிவார்கள்; வறியோர் ஆளாயும் வாழ்தி -
(ஆனால்  நீயோ)  பத்துடை  அடியவர்க்கு எளிய  ஏவல் ஆளாகவும்
வாழ்கிறாய்; அரசாள்தி  - (அனைத்து  உலகங்களையும்) அரசாளலும்
செய்கிறாய்; இவ்  அதிரேக  மாயை  -  இந்த   மிகுதியான  மாயச்
செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
 

இப்பாடலில்  கடவுள் என்று ஒரு பொருள் இல்லை என்று கூறும்
நாத்திகர்களை  மறுத்துத் திருமாலின் சௌலப்யம், பரத்துவம் ஆகிய
தன்மைகளைக்  கவிஞர்  விளக்கி  உள்ளார்.  பத்துடை அடியவர்க்கு
எளியனாய்ப்  பிறர்க்கு  அரிய  வித்தகனாய்  விளங்கும் தன்மையின்
விளக்கம் இங்குக் கூறப்படுகிறது.
 

                                               (256)
 

8258.‘சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய
    மறையும் துறந்து, திரிவாய்;