பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 377

இத்தகைய   செயலைக்  கண்டு   இரங்குபவர்களும்;  செறிந்தாரின் -
(இங்கு  இவ்வுலகில்)  நெருங்கி  (இருந்து)   வாழ்பவர்கள்  இடத்திலும்;
உண்மை  எனல்  ஆயதன்மை - (நீ) ஒருங்கு கலந்திருப்பது உண்மை
என்ற  செய்தி; உன்னது  இடையே  தெரிகின்றது  -  உன்னிடத்தில்
தெரிகின்றது; பிறிந்தார்  பிறிந்த  பொருளோடு  போதி -  அறிவில்
இருந்து  பிரிந்தவர்கள்  நீக்கியுள்ள   ஞானமாகிய பொருளுடன்  நீயும்
(அவர்களிடம்  இருந்து)  பிரிந்து  போகின்றாய்;  பிறியாது  நிற்றி  -
அவ்வாறு   பிரிந்து    இருந்தாலும்   கூட   அவர்கள்    இடத்திலும்
அந்தர்யாமியாகப்  பிரியாமல்  நிற்கிறாய்; அறிந்தார் அறிந்த பொருள்
ஆதி
 - தத்துவ ஞானமுடையவர்கள் (உண்மை  உணர்வால்)  ஆய்ந்து
அறிந்த  மெய்ப்பொருளாகவும் விளங்குகிறாய்; இவ் அதிரேகமாயை -
இந்த மிகுதியான மாயையை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
 

எல்லாப்    பொருள்களிலும் வேறுபாடு இன்றி ஒரு தன்மைத்தாய்
அந்தர்யாமியாய்  இறைவன்  கலந்தும் கரைந்தும் உள்ளான் என்றும்,
அவன்   உண்மை  அறிவினர்க்கே  விளங்கித்  தோன்றும்  என்றும்
அறிவற்ற  அஞ்ஞானிகளுக்கு  விளங்கித் தோன்ற மாட்டாது என்றும்
விளக்கிக் கூறியவாறு.
 

                                                (260)
 

8262.‘பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த
     பொருள்தோறும் நிற்றி; பிரியாய்;
தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறும்
     அவை தோறும் என்று தெளியாய்;
கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர்
     உரு ஆதி; கோடல் உரிபோல்,
ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?’
 

பேர்  ஆயிரங்கள்  உடையாய்  -  ஆயிரம்  திருப்பெயர்களை
உடையவனே; பிறந்த  பொருள்  தோறும்  - தோன்றிய பொருள்கள்
இடத்தில்  எல்லாம்; பிரியாய் நிற்றி - பிரியாமல் கலந்து நிற்கின்றாய்;
தீராய் -   அழிவு   அற்றவனே;   பிரிந்து  திரிவாய்  -  பல்வேறு
அவதாரங்களால்  உன்  உண்மை சொரூபத்தில் இருந்து  பிரிந்து வந்து
திரிகின்றாய்;  திறம்  தொறு  அவை  தோறும் என்று தெளியாய் -
அந்த அவதாரங்களில்  எல்லாம்   அப்பொருள்கள்  உன்னைத்  தம்
இனம் என்று மயங்கி நிற்றல் அன்றி உன் உண்மை