இராவணனோடு; அம்மறவினை முடித்த பின்னர் வருவென் உணர்த்துவென் - அந்தப் போர்த்தொழிலை (நீ) முடித்த பின்பு வந்து உணர்த்துவேன்; என்று உணர்த்தி - என்று கூறி; நல்கு விடை - இப்போது நீ எனக்கு விடை கொடு; எனப் பெயர்ந்து போனான் - என்று திரும்பிப் போனான். |
(270) |
இராமன் புகழ்ச்சியும் அனுமன் பேரொலியும் |
8272. | ஆரியன் அவனை நோக்கி, ‘ஆர் உயிர் உதவி, யாதும் காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்; பேர் இயலாளர், “செய்கை ஊதியம் பிடித்தும்” என்னார்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்? என்றான். |
ஆரியன் - இராமன்; அவனை நோக்கி - அந்தக் கருடனைப் பார்த்து; ஆர் உயிர் உதவி - (நாகக் கணையால் விழுந்து இறந்தவர்களுக்கு) அருமையான உயிரைத் தந்துதவி; யாதும் காரியம் இல்லாமல் போனான் - (நம்மிடத்தில்) எந்தக் காரியத்தையும் (கைம்மாறாகப்) பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் - அருளுடையவர்களுடைய செய்கை இதுதான் (போலும்); பேர் இயலாளர் - பெருந்தன்மையுடையவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் - செய்யும் செயலுக்குப் பயன் பெறுவோம் என்று எண்ண மாட்டார்கள்; (இஃது எவ்வாறு எனின்) வையம் - இவ்வுலகில் வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ - மழை (தங்களுக்கு) உதவுதலை நோக்கி அதற்குக் கைம்மாறு செய்ய வல்லமை உடையவர்கள் ஆள்வார்களோ? என்றான் - என்று கூறினான். |
கைம்மாறு கருதாது நாகக் கணையால் விழுந்து கிடந்தவர்களை உயிர்ப்பித்துக் காரியம் இல்லான் போன கருடனது செயல், உலகத்தவர் எவ்வித் கைம்மாறு செய்யாத இடத்தும் அவர்களுக்குப் பெய்து உதவும் மழையின் செயல் போன்றது என்றார். |
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு |
ஒப்புரவறிதல் - 1 |