நடக்குமோ என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர; வென்றிமேல் விளையும் என்ன உளை - வெற்றி (இனி) மேல் நமக்கு உண்டாகும் என்று எண்ணியுள்ளாய்; அது அன்று - அவ்வாறு எண்ணுவது சரி அன்று; என்ன சொன்னான் - என்று சொன்னான்; உற்றுளது உணர்ந்திலாதான் - (இலக்குவனும் வானரப் படைவீரரும் கருடனால் நாகக்கணை நீங்கி எழுந்ததை) அறிந்திலாதவனாகிய இந்திரசித்தன். |
இலக்குவனை வென்ற வெற்றியை எண்ணுவதை விட இனி இராமனுடன் போரிட்டு வெல்லவேண்டும். அப்போரின் முடிவு தான் நம் வலிமையின் தன்மையை முடிவு செய்யும், அவனுடைய ஆற்றலைப் பற்றி நாம் நினைக்கவும் முடியாது என்று இந்திரசித்தன் இராவணனிடம் கூறினான். பகைவரின் ஆற்றல் உணர்ந்து போரிடும் தன்மை கொண்டவன் இந்திரசித்தன் என்பதை அவனது இக்கூற்று உணர்த்தி நிற்கிறது. |
(289) |
8291. | ‘வென்றது, பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்; கொன்றது, குரக்க வீரர்தம்மொடு அக் கொற்றத்தோனை; நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க, மேன்மேல்’ என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னான்; |
குரக்கு வீரர் தம்மொடு - வானர வீரர்கள் தம்முடன்; அக்கொற்றத்தோனை - அந்த வெற்றியை உடைய இலக்குவனை; கொன்றது - கொன்றதும்; வென்றது - (அவர்களை) வென்றதும்; பாசத்தாலும் - நாகக்கணையாலும்; மாயையின் விளைவினாலும் - மாயை (யைச் செய்த) செயலின் விளைவினாலும் ஆகும்; இன்னும் இராமன் நின்றனன் - இன்னும் இராமன் (உயிருடன்) நின்றுள்ளான்; மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க - (இனிமேல்) நடக்கிறபடி நடக்கட்டும்; என்றனன் - என்று (இந்திரசித்தன்) கூறினான்; என்னக் கேட்ட இராவணன் - என்று (அவன் கூறியதைக்) கேட்ட இராவணன்; இதனைச் சொன்னான் - இச்சொற்களைக் கூறினான். |
(290) |