இந்திரசித்தன் மொழி | 8301. | ‘இன்று ஒருபொழுது தாழ்த்து, என் இகல் பெருஞ் சிரமம் நீங்கி, சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வ வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென்’ என்றான்; ‘நன்று’ என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில் புக்கான். | (இந்திரசித்தன் இராவணனைப் பார்த்து) இன்று ஒரு பொழுது தாழ்த்து - இன்று ஒரு நாள் காலம் தாழ்த்தி; என் இகல் பெரும் சிரமம் நீக்கி - எனக்குப் போரினால் ஏற்பட்ட பெரு வருத்தத்தை நீக்கிக்கொண்டு; நாளை - நாளைக்கு; ஒரு கணத்தில் சென்று - ஒரு கண நேரத்தில் (போர்க்களம்) சென்று; நான்முகன் படைத்த - பிரமன் உருவாக்கிப் படைத்த; தெய்வ - தெய்வத்தன்மை பொருந்திய; வென்றி வெம் படையினால் - வெற்றிக்கு உரிய கொடிய கணையால்; உன் மனத்துயர் மீட்பென் என்றான் - (பகைவர்களைக் கொன்று) உன் மனத்தில் ஏற்பட்டுள்ள துன்பத்தைப் போக்குவேன் என்று கூறினான்; நன்று என அரக்கன் போய் - நல்லது என்று கூறிவிட்டு அரக்கனாகிய (இராவணன்) போய்த்; தன் நளிமலர்க் கோயில் புக்கான் - தன்னுடைய சிறந்த மலர் மாலைகளால் அழகு படுத்தப்பட்டிருந்த அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான். | (300) |
|
|
|