| தார்த் தட மார்பன் தன்னை, ‘தா, விடை’ என்னச் சார்ந்தார்; பார்த்தனன், முனிந்து மன்னன், இனையன பகர்வது ஆனான்: |
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் - (வானரப் படை வீரர்கள்) ஆரவாரத்தோடு எழுப்பிய (பேரொலி) கேட்ட அரக்கப் படை வீரர்கள்; முரசம் ஆர்ப்ப - முரசு ஒலிக்க; போர்த் தொழில் வேட்கை பூண்டு - போர்த் தொழில் செய்தலில் பெரு விருப்பம் கொண்டு; பொங்கினர் புகுந்து மொய்த்தார் - சினம் மிக்கவர்களாய்ப் புகுந்து நெருங்கித்; தார்த்தட மார்பன் தன்னை - மாலை அணிந்த அகன்ற மார்பினை உடைய இராவணன் தன்னைப் பார்த்து; விடைதா என்னச் சார்ந்தார் - விடை தருக என்று (கேட்டு) நெருங்கினர்; மன்னன் - அரசனாகிய இராவணன்; முனிந்து பார்த்தனன் - சினம் கொண்டு பார்த்து; இனையன பகர்வது ஆனான் - இத்தகைய சொற்களைச் சொல்லல் ஆனான் |
(1) |
மாபக்கன் புகை நிறக்கண்ணன் வேண்டுதல் |
8303. | மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்தான்; ‘ஏவுதி எம்மை’ என்பார்; தம் முகம் இனிதின் நோக்கி, ‘போவது புரிதிர்’ என்னப் புகறலும், பொறாத தூதர், ‘தேவ! மற்று இவர்கள் செய்கை கேள்!’ எனத் தெரியச் சொன்னார்; |
மாபெரும் பக்கனோடு - மாபக்கனோடு; வான் புகைக் கண்ணன் வந்தான் - சிறந்த புகை நிறக் கண்ணனும் (சேர்ந்து) வந்து; எம்மை ஏவுதி என்பார் - இப்போருக்கு எங்களை ஏவுக என்றார்கள்; தம்முகம் இனிதின் நோக்கி - இராவணன் அவர்தம் முகங்களை மகிழ்ச்சியோடு பார்த்து; போவது புரிதிர் என்னப் புகறலும் - (போருக்குப்) போவதைச் செய்யுங்கள் என்று கூறுதலும்; பொறாத தூதர் - (அதனைக் கேட்டுப்) பொறுக்க முடியாத தூதுவர்கள்; தேவ - தேவனே! மற்று இவர்கள் செய்கை கேள் எனத் - இவர்கள் செய்த செயலைக் கேட்பாயாக என்று; தெளியச் சொன்னார் - தெளிவாகச் சொல்லலாயினார். |