பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 413

அழிந்திலர்;  என்றிலை -  (என்று)    சொல்லவில்லை  (என்பதற்காக);
நாசியை  வெட்டுதி  - (போர்க்களம்  சென்றவர்களுடைய) மூக்குகளை
எல்லாம்  வெட்டி  விடுவாயோ;  என்று  பகர்ந்தான்  - என்று (மாலி
இராவணனுக்குச்) சொன்னான்.
 
 

                                                 (15)
 

                    மாபெரும் பக்கனும் புகைக்கண்ணனும் பேசுதல்
 

8317.ஆறினன் என்பது அறிந்தனர், அன்னார்
தேறினர், அன்னது சிந்தை உணர்ந்தார்,
சீறிய நெஞ்சினர், செங் கணர், ஒன்றோ
கூறினர்? தம் நிலை செய்கை குறித்தார்:
 

ஆறினன்  என்பது அறிந்தனர்  -  (மாலி  கூறிய  சொற்களால்
இராவணன்)   சினம்   தணிந்தனன்   என்பதை    அறிந்தவர்களான;
அன்னார்   -   (அந்த   மாபக்கன்,  புகை  நிறக்கண்ணன்  ஆகிய)
இருவரும்; தேறினர் - (தண்டனை கிடைக்குமோ என்ற)  மனக்கலக்கம்
தீர்ந்து   தெளிந்து;  அன்னது  சிந்தை  உணர்ந்தார்  -  (அவனது
மனநிலையைத்)   தெளிவாக   மனத்தில்  உணர்ந்தவர்களாகி;  சீறிய
நெஞ்சினர்
 - சினம் கொண்ட நெஞ்சினை உடையராய்; செங்கணர் -
சிவந்த   கண்களை   உடையவராய்;   தம்   நிலை  -  தம்முடைய
நிலையினையும்;     செய்கை    குறித்தார்    -    செய்கையையும்
குறித்தவர்களாகி;  ஒன்றோ  கூறினர் - ஒன்றை மட்டுமா கூறினார்கள்;
(பல கூறினர் என்றபடி.)
 
 

                                               (16)
 

8318.‘உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ?
மின் நகு வானிடை ஏக, விரைந்தான்,
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்;
இந் நகர் எய்தினன், உய்ந்தனன்-எந்தாய்!
 

எந்தாய்   - எங்களுக்குத்  தந்தை  போன்றவனே!;  உன் மகன் -
உனக்கு  மகனாகிய (இந்திரசித்தன்); ஒல்கி ஒதுங்கினன் - (போரினால்)
தளர்ந்து   ஒதுங்கினான்;  அன்றோ  -  அது   மாத்திரமா?  மின்நகு
வானிடைஏக    விரைந்தான்
   -    மின்னல்கள்    விளங்குகின்ற
ஆகாயத்தினிடத்தில்  விரைந்து   சென்று; அன்னதின் மாயை இயற்றி
அகன்றான்
 - அங்கிருந்து  மாயைச் செயலைச் செய்து நீங்கி; இந்நகர்
எய்தினன்
 -  இந்த  (இலங்கை)  நகரை  வந்தடைந்து; உய்ந்தனன் -
உயிர் பிழைத்தான்.
 
 

                                                (17)