பக்கம் எண் :

414யுத்த காண்டம் 

8319.‘இப் பகல், அன்றுஎனின் நாளையின், அல்லால்,
முப் பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம்,
வெப்பு அகலா எரி வெந் தழல் வெந்த
செப்பு அகல் வெண்ணெயின்-நோன்மை தெரிந்தோய்!

நோன்மை  தெரிந்தோய் - வலிமையின் தன்மையை அறிந்தவனே!
இப்பகல்  -  (நாங்கள்)  இப்பகல்  ஒன்றில்; அன்று எனின் - இல்லை
என்றால்; நாளையின்  -  நாளை;  அல்லால் - அல்லாமல்; முப்பகல்
தீர்கிலம்
 - மூன்றாம் நாள் போகவிடோம்; (தவறாமல்) வெப்பு அகலா
-   வெம்மை   நீங்காத;   எரி   வெந்தழல்   வெந்த  -  எரிகின்ற
வெப்பமுடைய  தீயில் வெந்த; செப்பு அகல் வெண்ணெயின் - செம்பு
விளக்கில் (ஊற்றப்பட்ட) வெண்ணெயைப் போல; ஆவி முடிப்போம் -
பகைவர்களின் உயிரை முடிப்போம் (என்றனர்).

                                                (18)

8320.‘விட்டனை எம்மை, விடுத்து, இனி, வெம் போர்
பட்டனர் ஒன்று, படுத்தனர் ஒன்றோ,
கெட்டனர் என்பது கேளலை’ என்னா,
ஒட்டினர், ஆவி முடிக்க உவந்தார்.

எம்மை   விட்டனை - எங்களைப் போருக்கு அனுப்பி; விடுத்து -
விடுத்த  பின்பு; இனி வெம்போர் பட்டனர் ஒன்று - இனி (இவர்கள்)
கொடிய  போர்  செய்து  இறந்தார்கள்  என்பது  ஒன்று,   படுத்தனர்
ஒன்றோ
 -  (பகைவர்களை)  அழித்தனர்  என்பது  ஒன்று   (ஆகிய
இவ்இரண்டில் ஒன்றைத் தவிர); கெட்டனர் என்பது கேளலை என்னா
-  போரில்  தோற்று விட்டார்கள் என்ற சொல்லைக் கேட்க  மாட்டாய்
என்று;  ஆவி  முடிக்க  உவந்தார் ஒட்டினர் -  உயிரைக் கொடுக்க
மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.

                                                 (19)

                  இராவணன் இருவருடன் பெரும் படை அனுப்பல்

8321.அன்னவர் தம்மொடும் ஐ-இரு வெள்ளம்
மின்னு படைக் கை அரக்கரை விட்டான்;
சொன்ன தொகைக்கு அமை யானை, சுடர்த் தேர்,
துன்னு வயப் பரியோடு தொகுத்தான்.