பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 441

8376.ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
கார் ஓடும்நிறக் கத நாகம் அனான்,
தேரோடும் எடுத்து, உயர் திண் கையினால்,
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே.

 

ஊரோடு  மடுத்து - ஊர்தல் தொழிலுடன் பொருந்தி; ஒளியோனை
உறும்
 -  கதிரவனைச் சேருகின்ற; கார் ஓடும் நிறக் - கருமை ஓடுகிற
நிறத்தினை  உடைய; கத நாகம் அனான் - சினம் மிக்க (இராகு கேது
என்னும்)   பாம்புகள்   போன்றவனாகிய   (அங்கதன்);    உயர்திண்
கையினால்
 -  (தன்னுடைய)  உயர்ந்த  வலிமையான   கைகளினால்;
தேரோடும்   எடுத்து  -  (அந்த  மாபக்கனைத்)  தேருடன்  எடுத்து;
பாரோடும்   அடுத்து   -   நிலத்தில்   பொருந்தும்   படியாக; எறி
பண்பிடையே
- எறிந்த போது (அடுத்த பாடலில் முடியும்).
 

தேரைப்     பற்றச்  சென்ற  அங்கதனுக்குச்  சூரியனைப்  பற்றச்
செல்லும் இராகு கேதுக்கன் உவமையாம். ஊரோடு - ஊர் கோளோடு.
ஊர்கோள்   -   சூரியனைச்   சுற்றிய   பரிவேடம்  வட்டவடிவமாக
சூரியனைச்    சுற்றி    அமைவது.    அந்த    ஊர்    கோளோடு
விழுங்கச்செல்லும்    நாகம்;    தேரோடு    மாபக்கனைப்   பற்றும்
அங்கதனுக்கு  உவமையாம்    என்பது   மகாவித்துவான்   மயிலம்.
வே.சிவசுப்பிரமணியன் கருத்து.
 

                                                 (75)
 

8377.வில்லைச் செல வீசி, விழுந்து அழியும்,
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா,
சொல்லின் பிழையாதது ஓர் சூலம், அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால்.

 

வில்லைச்    செலவீசி - (அந்த மாபக்கன்) தன் வில்லை அப்பால்
செல்லும்படி   வீசி   விட்டு;  எல்லின்  பொலி  -  கதிரவன்  போல்
விளங்குகிற;  விழுந்து அழியும் - (மேலிருந்து) கீழே விழுந்து அழிகிற;
தேரிடை  நின்று  இழியா - தேரில் இருந்து இறங்கி; அவன் - அந்த
அங்கதனுடைய;  மல்லின்பொலி  மார்பின்  -  மற்போர்த் தொழிலால்
அழகு  விளங்குகின்ற மார்பின்கண்; சொல்லின் பிழையாதன - சாபம்
போல்   தவறாது   பயன்  விளைக்கவல்ல;  ஓர்  சூலம்  -  ஒப்பற்ற
சூலப்படை (ஒன்றை); வழங்கினனால் - செலுத்தினான்.
 

                                                 (76)