மாப்புண்டர வாசியின் - பெரிய கழுகு போன்ற குதிரையின்; வட்டணை மேல் - சுழன்று விரைந்த நடையின் மேல்; ஆப்புண்டவன் ஒத்தவன் - கட்டப்பட்டிருப்பவனைப் போன்றவனான (அந்தப் பிசாசன் உடைய) ; ஆர் அயிலால் - அருமையான வேல் படையினால்; பூப்புண் தர - நிலவுலகம் புண்ணைப் பெற்றிருத்தல் போல; வானர வெங்குழுவே - வானரங்களின் கொடிய கூட்டம்; ஆவி புறத்து அகல - உயிர் (உடம்பினை விட்டுப்) புறத்து நீங்க; கோப்புண்டன - இறந்து குவிந்து கிடந்தன. |
(97) |
8399. | ‘நூறும் இரு நூறும், நொடிப்பு அளவின், ஏறும்; நுதி வேலின், இறைப்பொழுதில் சீறும் கவி சேனை சிதைக்கும்?’ எனா, ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால். |
திறல் ஆறும் உம்பரும் - வலிமை ஓய்ந்த தேவர்களும்; ஏறும் நுதிவேலின் - வீசி எறிகிற கூர்மையான வேலினால்; நொடிப்பு அளவின் - ஒரு நொடிப் பொழுதிலும்; இறைப் பொழுதில் - கண நேரத்திலும்; நூறும் இருநூறும் - நூறும் இருநூறும் ஆக; சீறும் கவி சேனை - சினங்கொண்ட வானர சேனையை; சிதைக்கும் எனா - (இப்பிசாசன்) அழிக்கிறானே என்று சொல்லி அஞ்சினர் - அச்சம் கொண்டார்கள். ஆல் - அசை. |
(98) |
8400. | தோற்றும் உரு ஒன்று எனவே துணியா, கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை, ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன், வெங் காற்றின் படை கொண்டு கடந்தனனால். |
தோற்றும் உரு - பல இடங்களிலும் தோன்றுகின்ற வடிவம்; ஒன்று எனவே துணியா - ஒன்றுதான் என்று துணிந்து; கூற்றின் கொலையால் - கூற்றுவனுக்கு உரிய கொலைத் தொழிலோடு; உழல் கொள்கையனை - திரிகின்ற கொள்கை உடையவனான பிசாசனை; ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் - நாணேற்றும் வில் போரில் ஆண்மை கொண்ட இலக்குவன்; காற்றின் படை கொண்டு - கொடுமையான காற்றின் வாளியினால்; கடந்தனன் - கொன்று வீழ்த்தினான். ஆல் - அசை. |
(99) |