அவ்வுரை மகரக்கண்ணன் அறைதலும் - அவ்வுரையை மகரக்கண்ணன் உரைத்தவுடன்; அரக்கன் - இராவணன்; ஐய! - (அவனை நோக்கி) ஐயனே! செவ்விது - (நீ கூறிய உரை) முறைமையுடையது; சேறி! - (நீ) செல்வாயாக; சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் - சென்று உனது பழைய பகையைத் தீர்த்துக் கொள்வாயாக என்று சொன்னான்; பெற்ற விடையினன் - (இங்ஙனம்) இராவணனிடமிருந்து விடை பெற்றவனாய்; வரம் பெற்று வளர்ந்த தோளான் - (தேவர் முதலானவர்களிடமிருந்து) பெற்ற வரங்களினால் பொலிந்த தோள்களை உடையவனும்; வெவ்வழியவனும் - கொடிய போர் நெறிகளை உடையவனும் (ஆகிய அம்மகரக்கண்ணன்); தேர்மேற் கொண்டான் போனான் - தேர்மேல் ஏறிக்கொண்டு (போர்க்களம் நோக்கிப்) போனான். |
(7) |
8409. | தன்னுடைச் சேனை வெள்ளம் ஐந்து உடன் தழுவ, தானை மன்னுடையச் சேனை வெள்ளம் ஓர்-ஐந்து மழையின் பொங்கிப் பின்னுடைத்தாக, பேரி கடல் பட, பெயர்ந்த தூளி பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய, போனான். |
தன்னுடைச்சேனை - தன்னதாகிய சேனை வரிசை; வெள்ளம் ஐந்து உடன் தழுவ - ஐந்து வெள்ளம் உடன் தழுவி வரவும்; தானை மன்னுடைச் சேனை - தானை கொண்ட மன்னவனுடைய சேனை; வெள்ளம் ஓர் ஐந்து - ஐந்து வெள்ளம் சேனைகளும்; மழையின் பொங்கிப் பின்னுடைத்தாக - மேகத்தைப் போல ஆரவாரித்துக் கொண்டு தன் பின்னே வரவும்; பேரி கடல் படப் - பேரிகை கடல் போல் ஒலிக்கவும்; பெயர்ந்த தூளி - (சேனைகள் செல்லுதலால்) எழுந்த புழுதியால்; பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் - பொன் மயமான மேருமலையின் உச்சியிலுள்ள சிகரமும்; புதைய, போனான் - மறையும் படியாக (அம்மகரக்கண்ணன்) சென்றான். |
பின்வரும் 8440ஆம் பாடலில் ‘பராவ அரும் வெள்ளம் பத்தும்’ என வருதற்கேற்ப, இங்கு ‘கோடி’ என்பது ‘வெள்ளம் எனவும் ‘நால்’ என்பது ‘ஒர்’ எனவும் பாடம் கொள்ளப்பெற்றது. |
(8) |