‘கூயினன், நுந்தை’ என்றார் - (இராவணன் பணித்தவாறு இந்திரசித்தை அணுகிய தூதர்கள்) ‘உமது தந்தையார் (உம்மை) அழைத்தனர் எனத் தெரிவித்தனர்; குன்று எனக் குவிந்த தோளான் - குன்று போலத் திரண்ட தோளை உடையவனான இந்திரசித்து; ‘போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!’ என்றான் - ‘(போருக்குச்) சென்ற அரக்கர்கள் யாவரும் இறந்து பட்டனரோ?’ எனக் கேட்டான்; ‘ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?’ என்னா - ‘(இராவணனால் இம்மனிதர் மீது) போருக்கு என ஏவின பின்பு (பொருத பின் அப்போர்க்களத்தினின்றும்) மீண்டு திரும்பி வருபவர் உன்னையல்லால் வேறு யார் இருக்கிறார்கள்?’ எனக் கூறி; மேயது சொன்னார் தூதர் - (போர்க் களத்தில்) நிகழ்ந்ததனைத் தூதர்கள் எடுத்துரைத்தனர்; தாதை பால் விரைவின் வந்தான் - (அதனைக் கேட்ட இந்திரசித்தன்) தந்தையினிடத்தினில் விரைந்து வந்தான். | (2) | தந்தையைத் தேற்றி, இந்திரசித்தன் போர்க்களம் செல்லுதல் | 8443. | வணங்கி, ‘நீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி, பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்’ என்றான். | வணங்கி ‘நீ ஐய!’ “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன உணங்கலை - (இந்திரசித்து, தன் தந்தையை) வணங்கி, ‘ஐயனே நீ (வன்மையான) புதல்வர்கள் (பகைவரால்) இறந்தொழிந்தார்கள்’ என வாடி வருந்துதல் தவிர்க; இன்று காண்டி - (எனது போர்த்திறனை) இன்றே காண்பாய்; உலப்பறு குரங்கை நீக்கி, பிணங்களின் குப்பை - அளவற்ற குரங்குச்சேனைகளை (உயிர்) நீக்குவதனால் (அவற்றின்) பிணக்குவியலையும்; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை - ஏனை மனிதராகிய இராம இலக்குவரின் உயிர் நீங்கிய உடம்புகளையும்; ‘கணங்குழைச் சீதைதானும் அமரரும் காண்பர்’ என்றான் - காதணி அணிபவளான சீதையும், தேவர்களும் காண்பார்கள்” என்று கூறினான். |
|
|
|