கற்கண்டு போன்ற இனிய சுவை உடையதாய் அமைந்த வீணை நரம்பிலிருந்து தோன்றும் (உணர்வு) மணங்கமழும் இசையாகிய தேனும்; வண்டினின் பொலியும் நல்யாழ் வழியுறு நறவம் - நல்ல யாழிடத்தினின்று வருவதும் வண்டின் ஒலிபோல விளங்குகின்றதுமான இசையாகிய தேனும்; வானத்து அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய - வானுலகத்து வாழ்வாராகிய தேவர்கள் தம் செவிவாயாகப் பருகி மகிழ்தற்குரிய அமிழ்து என்று சொல்லும்படியாக (கேட்டார்க்கு) இன்பஞ்செய்வனவாயின.
(8)
8449.
வில் ஒலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின் ஓங்கும் ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும் செல் ஒலி, திரள் தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில் செல்லும் கல்லொலியோடும் கூடக் கடல் ஒலி கரந்தது அன்றே.
வில் ஒலி - வில் நாணின் ஒலியும்; வயவர் ஆர்க்கும் விளி ஒலி - வீரர் ஆரவாரிக்கும் அறைகூவல் ஒலியும்; தெழிப்பின் ஓங்கும் ஒல்லொலி - அதட்டுதலால் உயர்ந்து தோன்றும் ஒல்லென்னும் ஓசையும்; வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் செல் ஒலி - வீரர் பேசுகின்ற பேச்சின் ஒலியும், (அவர்கள்) கனைத்தலால் உண்டாகிய இடி போன்ற ஒலியும்; திரள்தோள் கொட்டும் சேண் ஒலி - திரண்ட தோள்களைக் கொட்டுதலால் நெடுந்தூரத்தே சென்றிசைக்கும் ஆர்ப்பொலியும்; நிலத்தில் செல்லும் கல்லொலியோடும் - (அவ்வீரர்கள்) நிலத்தில் (விரைந்து) செல்லுதலால் உண்டாகும் கல்லென்னும் ஓசையுடன்; கூட - ஒருங்கு கூடி ஒலிக்க; கடல் ஒலி கரந்தது - கடலின் ஒலியானது இப்பேரொலிக்குள் (அடங்கி) மறைந்தது.
(9)
8450.
நாற் கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின்- மேல் கடந்து எழுந்த தூளி விசும்பின்மேல் கொழுந்து வீச,