பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 491

நீலனை   முதலாய்  உள்ள நெடும்படைத்தலைவர் நின்றார் -
நீலனை முதலாகக்  கொண்டு நெடிய பெருஞ்சேனைகட்குத் தலைவராக
அங்கு  நின்ற வானரவீரர்கள்; தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான்
சமையும்   காலை
  -  பனை    மரங்களையும்,      மலைகளையும்
பறித்தெடுத்துக்கொண்டு (அரக்கர்களை) தாக்குதற்கு முற்பட்ட  பொழுது;
ஞாலமும் விசும்பும் காத்த    நானிலக்    கிழவன்    மைந்தன்
-   மண்ணுலகையும்   விண்ணுலகையும்   காத்த நானில மன்னனாகிய
தசரதன் மைந்தனாகிய இராமன்; மேல்  அமர்விளைவை    உன்னி,
விலக்கினன், விளம்பலுற்றான்
-  இனிமேல் நிகழவிருக்கும்  போரின்
விளைவை எண்ணி, (அவ்வானர வீரர்களைத்) தடுத்து நிறுத்தியவனாய்ப்
பின்வருமாறு கூறத் தொடங்கினான்.
 

                                                  (20)
 

8461.

‘கடவுளர் படைகள் நும்மேல் வெய்யவன் துரந்தகாலை,
தடை உளஅல்ல; தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படைஉளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர்’
                                         என்றான்.
 

“கடவுளர் படைகள் நும்மேல்”  வெய்யவன்  துரந்தகாலை  -
“தெய்வப் படைக்கலங்களை உங்கள்மீது கொடியோனாகிய இந்திரசித்து
செலுத்தும்போது;  தடை   உள  அல்ல  -  (அவை,  மரம்,  மலை
முதலியவற்றால்)  தடுத்தற்குரிய அல்ல; தாங்கும் தன்மையீர் அல்லீர்
- (நீங்களும்  அவற்றை ஏற்றுத்) தாங்கக்கூடிய வல்லமை யுடையீரல்லீர்;
தாக்கிற்கு இடை  உளது  எம்பால் நல்கிப்பின்  நிரை  நிற்றிர்
 -
(முன்னின்று)     தாக்குதற்கு     இடமாய்   உள்ள   முதலிடத்தினை
எங்களுக்குக்  கொடுத்துவிட்டு  (எங்களுக்குப் பின்னே) பின் வரிசையில்
நிற்பீராக; ஈண்டு இப்படை உளதனையும் இன்று, எம் வில்தொழில்
பார்த்திர்” என்றான்
 -  இங்கு  இந்த  அரக்கர் சேனை (உயிரோடு)
உள்ள   அளவும்   இன்று  எம்முடைய வில் தொழில் வல்லமையினை
(உடன் நின்று) காண்பீராக” என்று கூறினான்.
 

                                                  (21)