அருள்முறை அவரும் நின்றார்; ஆண் தகை வீரர், ஆழி உருள் முறை தேரின், மாவின், ஓடை மால் வரையின், ஊழி இருள் முறை நிருதர்தம்மேல், ஏவினர் - இமைப்பிலோரும், ‘மருள் முறை எய்திற்று’ என்பர்-சிலை வழங்கு அசனி மாரி.
அருள் முறை அவரும் நின்றார் - (இராமன்) பணித்தருளிய முறைப்படி (நீலன் முதலாகிய) அப்படைத் தலைவரும் பின் வரிசையில் சென்று நின்றனர்; ஆண் தகை வீரர் - ஆண்மைக்குணமுள்ள இராமஇலக்குவராகிய அவ்வீரர்கள்; ஆழி உருள் முறைத்தேரின் - சக்கரத்துடன் (விரைந்து) உருளும் முறைமையினை உடைய தேர்கள் மேலும்; மாவின் - குதிரைகள் மேலும்; ஓடை மால் வரையின் - முகபடாம் அணிந்த பெரிய மலை போலும் யானைகள் மேலும்; ஊழி இருள் முறை நிருதர் தம்மேல் - ஊழிக்காலத்து இருளின் தன்மையை உடைய அரக்க வீரர்கள் மேலும்; ஏவினர் - அம்புகளை ஏவினார்கள்; சிலை வழங்கு அசனிமாரி - (அவ்விருவருடைய) விற்கள் வெளிப்படுத்தும் இடியேற்றுடன் கூடிய அம்பு மழையானது; இமைப்பிலோரும் - கண்ணிமைத்தலில்லாத தேவர்களும்; ‘மருள்முறை எய்திற்று’ என்பர் - (இஃது என்ன ஊழிக்காலமோ என) மருளும் நிலை அடைந்தது என்பர்.
(22)
8463.
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக் குமைத்தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து இன்று எம்மால் அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ? மேரு என்று அமைந்தவில்லான், உமைக்கு ஒருபாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த.