பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை நோக்கும்; ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும்.
ஆர்க்கின்ற அமரர் தம்மை நோக்கும் - (அரக்கர் சேனைகளின் அழிவுகண்டு) ஆரவாரிக்கின்ற தேவர்களை நோக்குவான்; அங்கு அவர்கள் - அப்பொழுது அத்தேவர்கள்; அள்ளித் தூர்க்கின்ற பூவை நோக்கும் - (இராம இலக்குவர் மீது) அள்ளிச் சொரிந்து நிரப்பும் மலர்களை நோக்குவான்; துடிக்கின்ற இடத்தோள் நோக்கும் - (பின்னர் நேரவிருக்கும் பெருந்துன்பத்திற்கு அறிகுறியாக) துடிக்கின்ற தனது இடது தோளை நோக்குவான்; பார்க்கின்ற திசைகள் எங்கும் - தான் காண்கின்ற திசையிடங்கள் எங்கும்; படும்பிணப் பரப்பை நோக்கும் - இறந்து வீழ்ந்த பிணங்களின் மிகுதியை நோக்குவான்; குருதி ஆற்றில் ஈர்க்கின்ற - இரத்த ஆற்றினால் இழுத்துச் செல்லப்படுகின்ற; யானையின் பிணத்தை நோக்கும் - யானைகளின் பிணங்களைப் பார்ப்பான்.
(33)
8474.
ஆயிர கோடித் தேரும் அரக்கரும் ஒழிய, வல்ல மா இருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும், வல்லை போயின குரக்குத் தானை புகுந்திலது அன்றே, பொன் தேர்த் தீயவன்தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா.
வல்லை போயின குரக்குத் தானை - முன்னர் விரைந்து ஓடிய வானர சேனைகள்; ஆயிரம் கோடித் தேரும் - ஆயிரங்கோடி என்னும் தொகையினவாகிய தேர்களும்; அரக்கரும் ஒழிய - (அவற்றில் நின்று பொரும்) அரக்கர்களும் தவிர; அல்லா மா இருஞ் சேனை எல்லாம் - அவையல்லாத மிகப்பெரிய சேனைகளெல்லாம்; மாய்ந்தவா கண்டும் - இறந்தொழிந்தமையை நேரிற்கண்டும்; பொன் தேர்த் தீயவன் தன்மேல் உள்ள - பொன்னால் இயன்ற தேரினை உடைய கொடுந்தொழிலாளனாகிய இந்திர சித்தன்பால்; பயத்தினால் கலக்கம் தீரா - தாம் மேற்கொண்ட