8480. | ‘‘காக்கவும் கற்றிலன், காதல் நண்பரை; போக்கவும் கற்றிலன், ஒருவன்; போய்ப் பிணி ஆக்கவும் கற்றிலன்; அமரில் ஆர் உயிர் நீக்கவும் கற்றிலன்” என்று நின்றதால்; |
காதல் நண்பரைக் காக்கவும் கற்றிலன் - (தன்பால்) அன்புடைய நண்பர்களைக் காப்பாற்றவும் (ஆற்றலற்றான்) அறிந்திலன்; ஒருவன் பொய்ப்பிணி போக்கவும் கற்றிலன் - (பகைவன்) ஒருவன் வஞ்சனையாற் செய்த (நாகபாசமாகிய) பிணிப்பினைப் போக்குதற்கும் அறிந்திலன்; வென்றி ஆக்கவும் கற்றிலன் - (பகைவனைத் தொடர்ந்து பொருது) தனக்கு வெற்றியை உண்டாக்கிக் கொள்ளுதற்கும் அறிந்திலன்; ஆர் உயிர் நீக்கவும் கற்றிலன் - (இந்நிலையில் தனது பெருமை நிலைபெற) அரிய உயிரைத் துறப்பதற்கும் அறிந்திலன்; என்று நின்றது - என்றுள்ள பழி (எனக்கு உலகில்) நிலை பெற்று விட்டது. |
‘ஒருவன்’ என்றது இந்திரசித்தனை, அவன் வெளிப்பட நின்று போர் செய்யாது மாயத்தால் மறைந்து நின்று நாகபாசத்தை ஏவினமையால் அது ‘பொய்ப்பிணி’ எனப்பட்டது. பொய்ப்பிணி - பொய்ம்மையைத் துணையாகக் கொண்டு பிணித்த பிணிப்பு. நண்பர்கட்குத் தீங்கு வாராமல் முன்னறிந்து காத்தல் வீரர் கடன். அது தவறின் தீங்கு வந்தவுடன் அதனைக் களைந்திருக்க வேண்டும். முடியாத போது தன்னையாவது காத்துக்கொண்டு பகைவனை விடாது பொருது பழி தீர்த்திருக்க வேண்டும். அதுவும் இயலாத பொழுது உயிர் விடுத்து மானங்காத்திருத்தல் வேண்டும். எதுவும் செய்திலன் என இரங்கிக் கூறுகின்றான் இலக்குவன். |
(40) |
8481. | ‘இந்திரன்பகை எனும் இவனை, என் சரம் அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின், வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு மைந்தரில் கடை எனப் படுவன், வாழியாய்! |
வாழியாய் - (யாவரையும்) வாழ்விக்க வல்லவனே! இந்திரன் பகை எனும் இவனை - இந்திரனுக்குப் பகைவன் எனப் பேசப்படும் இவ் இந்திரசித்தனை; என் சரம் அந்தரத்து அருந்தலை அறுக்கலாது எனின் - எனது அம்பு விசும்பின் கண்ணே அரிய தலையினை அறுத்துத் (தள்ளி) கொல்லாது (வறிது) செல்லுமாயின்; வெந்தொழிற் செய்கையன் விருந்தும் ஆய் - வெம்மை வாய்ந்த |