கொலைத் தொழிலைத் தன் இயல்பான செய்கையாகக் கொண்ட கூற்றுவனுக்குரிய விருந்தினனாக (யான்) ஆகி; நெடு மைந்தரில் கடை எனப்படுவன் - (இவ்வுலகில் உயர்த்துக் கூறத்தகும்) பெருமை வாய்ந்த வீரர்களிற் கடையானவன் என இழித்துரைக்கப்படும் நிலையினனாவேன். |
(41) |
8482. | நின்னுடை முன்னர், இந் நெறி இல் நீர்மையான்- தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால்,- பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!- என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்அரோ. |
பொன்னடை வனைகழல் பொலம்பொன் தோளினாய்! - பொன்னால் அணிநலமுறப் புனைந்த வீரக்கழலினையும் பொன்னணிகளையுடைய அழகிய தோள்களையும் உடைய அண்ணலே! நின்னுடை முன்னர் - நினது (கண்) முன்பாக; இந்நெறியில் நீர்மையன் தன்னுடைச் சிரத்தை - இந்த அறமுறையற்ற தன்மையனாகிய இந்திரசித்தனது தலையினை; என் சரத்தின் தள்ளினால் - எனது அம்பினால் அறுத்து வீழ்த்துவேனாயின்; என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் - யான் நின்பாற் கொண்ட அடிமைத்திறமும் போற்றத் தகும் புகழுடையதாகும். |
(42) |
8483. | ‘கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என் சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின், முடிய ஒன்று உணர்த்துவென்; உனக்கு நான் முயல் அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்!’ |
ஆழியாய் - ஆணைச் சக்கரத்தை உடையவனே! கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க - விரைவினில் உலகம் எல்லாம் நோக்கி நிற்கும் போழ்தே; என் சுடுசரம் இவன் தலை துணிக்கலாது எனின் - என்னுடைய சுட்டழிக்க வல்ல அம்பு இந்த இந்திரசித்தனின் தலையை அறுத்தெறியவில்லை என்றால்; முடிய ஒன்று உணர்த்துவேன் - முடிவாக ஒரு பொருள் (உனக்கு) மொழிவேன்; உனக்கு நான் முயல் அடிமையின் பயன் இகந்து அறுக - உனக்காக நான் முயல்கின்ற அடிமைச் செயலின் பயன் (என்னை விட்டு) நீங்குவதாக; |