முளரிக் கண்ணனும் - செந்தாமரைக் கண்ணனாகிய இராமனும்; முறுவல் வாள்முகத்தினன் - (இலக்குவனது வஞ்சினத்தைக் கேட்டு) புன்சிரிப்போடும் கூடிய ஒளிபெற்ற முகத்தினனாகிய; அறிவ நீ “அடுவல்” என்று அமைதி ஆம் எனின் - அறிவுடைய தம்பியே நீ (பகைவரை) கொல்வேன்’ என முடிவு செய்து விட்டாய் எனின்; இறுதியும், காவலும் இயற்றும் ஈசரும் வெறுவியர் - அழித்தல் தொழிலையும், காத்தல் தொழிலையும் செய்யும் இரு பெருங் கடவுளரும் தத்தமக்குரிய தொழிலை இழந்து வெறுமையுறுவர்; வேறு இனி விளைவது யாது என்றான் - (நின் கருத்திற்கு) மாறாக இனி இவ்வுலகில் நிகழக்கூடியது யாதுளது? என (இலக்குவனைப் பாராட்டிக்) கூறினான். |
(45) |
இராமனைத் தொழுது, இலக்குவன் போருக்கு எழுதல் |
8486. | சொல் அது கேட்டு, அடி தொழுது, ‘சுற்றிய பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக் கொல்வல்; இங்கு அன்னது காண்டிகொல்’ எனா, ஒல்லையில் எழுந்தனன்-உவகை உள்ளத்தான். |
சொல்வது கேட்டு அடி தொழுது - (இராமபிரான் உளமுவந்து கூறிய) அம்மொழியினைக் கேட்டு (அப்பிரானுடைய) திருவடிகளை வணங்கி; சுற்றிய பல் பெருந் தேரொடும் - சுற்றிச் சூழ்ந்த பலவாகிய தேர்களுடனே; அரக்கர் பண்ணையைக் கொல்வல் - அரக்கர் தொகுதியை இப்பொழுதே கொன்றொழிப்பேன்; இங்கு அன்னது காண்டி கொல் - இங்கு அதனைக் காண்பாயாக; எனா - என்று கூறி; உவகை உள்ளத்தான் - மகிழ்ச்சி நிரம்பிய மனத்தினனாகிய இலக்குவன்; ஒல்லையில் எழுந்தனன் - விரைந்து போருக்குப் புறப்பட்டான். |
பண்ணை - தொகுதி. தனது வஞ்சின மொழியினை மதித்துப் பாராட்டி இந்திரசித்தனைக் கொல்லும் செயலினைத் தனக்கே விடுத்தமையின் இலக்குவன் பெரிதும் மகிழ்ந்தனன் என்பதனை ‘உவகை உள்ளத்தான்’ என்பதனாற் குறித்தார். |
(46) |
8487. | அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என, மங்குல்நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன் சங்கம் ஒன்று ஒலித்தது, கடலும் தள்ளுற. |