இச்செய்யுள் சொற்பொருட் பின்வருநிலையணி அமையப் பெற்றது. அடியென்று தொடங்கி இறுதி அடியில் முடியென்று வந்த நயமும் காண்க. |
(51) |
8492. | ‘இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி; மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்’ என்ன ஓர் தன்னையும் தெரிந்தது இல்லையால்- சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால். |
சின்ன பின்னங்களாய் மயங்கிச் சிந்தலால் - (போரரங்கில் அனைவரும்) கண்டதுண்டமாகச் சிதறிக் கலந்து கிடந்தமையால்; இன்னது ஓர் உறுப்பு - காணப்படும் இது இன்ன உறுப்பு; இவை இனைய தேர் பரி - இவை இத்தன்மையவாகிய தேர்களும் குதிரைகளும்; மன்னவர் இவர் - இவர் அரசர்; இவர் படைஞர் - இவர்கள் படை வீரர்கள்; மற்றுளோர் என்ன - இவர்கள் அவ்வரசரும். படைஞருமல்லாத தேர்ப்பாகர் முதலானோர் என்று பகுத்துரைத்தற்கேற்ற; ஓர் தன்மையும் தெரிந்தது இல்லை - ஒரு தன்மையும் தெரிந்தது இல்லையாம். |
(52) |
8493. | தந்தையர் தேரிடைத் தனயர் வன் தலை வந்தன; தாதையர் வயிர வான் சிரம் சிந்தின, காதலர்க்கு இயைந்த தேரிடை- அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன. |
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன - (அம்பினால்) துணிக்கப்பட்டு அம்பொடும் விசும்பின் மேல் எழுந்தனவாகிய தலைகளில்; தனயர் வன்தலை தந்தையர் தேரிடை வந்தன - புதல்வர்களின் வலிய தலைகள் (அவருடைய) தந்தையர் தேர்களில் வந்து வீழ்ந்தன; தாதையர் வயிர வான்சிரம் - தந்தையர்களின் வலிமை வாய்ந்த தலைகள்; காதலர்க்கு இயைந்த தேரிடை சிந்தின - (அவர்தம்) புதல்வர்கட்கு அமைந்த தேர்களிற் சிதறி வீழ்ந்தன. |
(53) |
8494. | செம் பெருங் குருதியின் திகழ்ந்த, செங் கண் மீன் கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என- தும்பை அம் தொடையலர் தடக் கை, தூணி வாங்கு அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன. |