சிந்துரங்களின் பருமமும் பகழியும் தேரும் - யானைகளின் மேல் இடும் தவிசும், அம்புகளும் தேரும்; குந்துவல் நெடுஞ்சிலை முதல் படைகளும் கொடியும் - வளைந்த வலிய நெடிய வில் முதலிய படைகளும், கொடியும்; இந்தனங்களாய் - விறகுகளாக (அமைய) இறந்தவர் விழிக்கனல் இலங்க - இறந்த வீரர்களுடைய (சினம் மிக்க) கண்களாகிய தீ (கொழுந்து விட்டு) விளங்க; வெந்த வெம்பிணம் கழுதுகள் விரும்பி விழுங்கின - வெந்தன போன்ற வெம்மையுடைய பிணங்களைப் பேய்கள் விரும்பி விழுங்கின. | போர்க்களத்தில் பகைவரைக் காணுந்தோறும் சினம் மிகுந்து வீரர்கள் விழியில் தீப்பொறி பறக்கும். எனவே பருமம், பகழி முதலானவற்றை விறகாக்கி, வீரர்கள் விழி நெருப்பினை அதனை எரிக்கும் அனலக்கினார்; இஃது இயைபுருவகம் என்னும் அணியாம். | (56) | 8497. | சில்லி ஊடு அறச் சிதறின சில; சில, கோத்த வல்லி ஊடு அற, மறிந்தன; புரவிகள் மடியப் புல்லி மண்ணிடைப் புரண்டன சில; சில, போர் ஆள் வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய. | சில சில்லி ஊடு அறச் சிதறின - சில தேர்கள் சக்கரங்கள் நடுவே முறியச் சிதறின; கோத்த சில வல்லி ஊடு அற மறிந்தன - (ஒன்றோடு ஒன்று மோதி) பிணைந்த சில தேர்கள் குசைக்கயிறுகள் இடையில் அறுபட்டொழிய குப்புற வீழ்ந்தன; சில, புரவிகள் மடியப் புல்லி மண்ணிடைப் புரண்டன - சில தேர்கள் கட்டிய குதிரைகள் இறந்து விழத் தரையிற் பொருந்தி உருண்டன; சில போர் ஆள் வில்லி சாரதியொடும் பட வெறிய திரிந்தன - சில தேர்கள், போர்த்தொழிலை ஆள்பவனாகிய வில்வீரன் பாகனொடும் இறந்துபட (யாரும் அமர்வாரின்றி) வெறுமையுடையனவாய்த் திரிந்தன. | (57) | 8498. | அலங்கு பல் மணிக் கதிரன, குருதியின் அழுந்தி, விலங்கு செஞ் சுடர் விடுவன, வெளி இன்றி மிடைந்த,- குலம் கொள் வெய்யவர் அமர்க் களத் தீயிடைக் குளித்த இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன-இரதம். |
|
|
|