அலங்கு பல்மணிக் கதிரன - விட்டு விளங்கும் பலவகை மணிகளின் ஒளிக்கற்றைகளை உடையனவும்; குருதியின் அழுந்தி விலங்கு செஞ்சுடர் விடுவன - இரத்த வெள்ளத்தில் அழுந்தினமையால் மேலே பரவிப்பாயும் செந்நிற ஒளியை வீசுவனவும் ஆகி; வெளி இன்றி மிடைந்த இரதம் - இடைவெளி இன்றி நெருங்கிய தேர்கள்; குலங்கொள் வெய்யவர் மறுகிடத் - கூட்டமாகப் பொருந்திய கொடியோராகிய அரக்கர்கள் மனங்கலங்கி வருந்த; தீயிடைக் குளித்த இலங்கை மாநகர் மாளிகை நிகர்த்தன - (அநுமனாற் கொளுத்தப்பட்ட) தீயினுள்ளே அழுந்திய இலங்கைப் பெருநகரத்தினுள்ளேயுள்ள மாளிகைகளை ஒத்துத் தோன்றின. |
(58) |
இராமனும் அம்புசொரிதலால் இந்திரசித்து தனிப்படுதல் |
8499. | ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி; வான மானங்கள் மறிந்தெனத் தேர் எலாம் மடிய, தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன். |
ஆன காலையில் இராமனும் அனுமனைத் தூண்டி - அப்பொழுது இராமபிரானும் (தன்னைத் தாங்கியுள்ள) அநுமனை (இந்திரசித்தன் முன்னர்ச்) செல்லுமாறு செலுத்தி; அயில்முகப் பகழி சோனை மாரியிற் சொரிந்தனன் - கூரிய முனையுடன் கூடிய அம்புகளை விடாப்பெருமழை போற் சொரிந்தான்; (அதனால்) தேர் எலாம் வானமானங்கள் மறிந்தென மடிய - அரக்கர்களுடைய தேர்களெல்லாம், வான்வழியே செல்லும் விமானங்கள், குப்புற வீழ்ந்தாற் போன்று சிதைந்து வீழ்ந்தமையால்; இராவணன் தனயன் தானும் தேருமே ஆயினன் - இராவணன் மைந்தனாகிய இந்திர சித்து தானும் தன்னுடைய தேருமேயாகத் தனிப்பட்டான். |
(59) |
இந்திரசித்து ஒன்று கூறத் தொடங்குதல் |
8500. | பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை வல் விலங்கல்போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய, வில் இலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான், சொல், விலங்கலன், சொல்லினன்-இராவணன் தோன்றல். |