பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 55

இந்திரனது     புகழுக்குக்  காரணமான  நல்வினைப்  பயனை முற்றும்
துடைத்த  என்  தம்பியே; யான்  உன்னை இவ் உரையும் கேட்டேனோ
-  நான்  உன்னைப்  பற்றி   இவ்வாறான  சொற்களைக்  கேட்கும்படி
ஆனேனே.

தம்பியோ,     தும்பியோ, நம்பியோ, எம்பியோ ஆகியவை புலம்பல்
விளிப்  பெயர்களாதலின்  ஓகாரம்  பெற்று  வந்தன,  நாமப் பொறி -
புகழுக்குக்   காரணமாகிய   நல்வினைப்   பயன்.   தும்பி  -  யானை
கேட்டேனோ - ஓகாரம் இரக்கம் குறித்து வந்தது.

                                                  (78)

7710.‘மின் இலைய வேலோனே! யான் உன் விழி காணேன்.
நின் நிலை யாது என்னேன், உயிர் பேணி நிற்கின்றேன்;
உன் நிலைமை ஈதுஆயின், ஓடைக்களிறு உந்திப்
பொன்னுலகம் மீளப் புகாரோ, புரந்தரனார்?

மின்     இலைய வேலோனே - ஒளி பொருந்திய இலை வடிவில்
அமைந்த  வேற்படையை  ஏந்தியவனே;  யான் உன் விழிகாணேன் -
யான்  (நீ  இறக்கும்  போது)  உன்  அருகிருந்து  கண்ணால்  சாவைக்
காணாதவனானேன்;  நின்  நிலை யாது என்னேன் - போர்க்களத்தில்
உன்  நிலை  எவ்வாறு உள்ளது என வினவி  அறியாதவன்  ஆனேன்;
உயிர்  பேணி  நிற்கின்றேன்  -  மேலும்  என் உயிரைப் (பெரிதென
மதித்து   அதனைப்)   பாதுகாத்துக்   கொண்டு   நிற்கின்றேன்;  உன்
நிலைமை    ஈது   ஆயின்
  -   உன்னுடைய   நிலை   இவ்வாறு
இருக்குமானால்;   ஓடைக்  களிறு  உந்தி  -  நெற்றிப்  பட்டமணிந்த
(ஐராவதம்  என்னும்)  யானையைச்  செலுத்திக்  கொண்டு; புரந்தரனார்
பொன்னுலகம்  மீளப் புகாரோ
 - இந்திரன் தன் இந்திரலோகத்துக்கு
மீண்டும் புக மாட்டானோ? புகுவன்;.

யான்     உன் விழி காணேன் - உடன் பிறந்தார் இறக்கும் போது
அருகில்  இருந்து  காண  வேண்டும்  என்ற  பண்பாட்டு மரபு பற்றி
வந்தது.  நின்நிலை  யாது  என்னேன் - கும்பகருணனைப் போருக்கு
அனுப்பி   விட்டுப்   போர்க்கள   நிலைமையை  எண்ணாது  மாயா
சனகனை வைத்துக் காம வயப்பட்டுத் தான் செய்த செயலை எண்ணி
இரங்கிக் கூறியது. ஓடை - நெற்றிப் பட்டம், களிறு - ஐராவதம் என்ற
வெள்ளை யானை. பொன்னுலகம் - தேவலோகம், சுவர்க்கம் எனினும்
ஆம்.

                                                  (79)