| 7711. | ‘வல் நெஞ்சின் என்னை நீ நீத்துப் போய், வான் அடைந்தால், இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்? மின் அஞ்சும் வேலோய்! விழி அஞ்ச வாழ்கின்றார், தம் நெஞ்சம் தாமே தடவாரோ, தானவர்கள்? |
மின் அஞ்சும் வேலோய் - மின்னலும் அஞ்சும்படி ஒளி வீசுகின்ற வேல் படையை உடையவனே; என்னை நீ வன் நெஞ்சின் நீத்துப் போய் - என்னை நீ வலிய நெஞ்சுடையவனாக விட்டுப் போய்,; வான் அடைந்தால் - வீரர் உலகு அடைந்தால்; இன்னம் - இனிமேல்; சிலரோடு ஒரு வயிற்றின் பிறப்பார் யார் - சிலருடன் ஒரு (தாய்) வயிற்றில் பிறக்க (விரும்புபவர்) யார்? விழி அஞ்ச வாழ்கின்றார் - கண் (எதிரில் வர) அஞ்சி வாழ்கின்றவர்களாகிய; தானவர்கள் - தனுவின் வழி வந்த அசுரர்கள்; தம் நெஞ்சம் தாமே தடவாரோ - தம் மார்பைத் தாமே தடவிக் கொண்டு வரமாட்டார்களா? |
வன்நெஞ்சில் - என்னைப் பிரியாமல் இருந்த நீ இப்போது கல் நெஞ்சனாய் என்னைப் பிரிந்தாய். வான் - வீர சுவர்க்கம், நெஞ்சம் தடவல் - தன் பகை போய்விட்டது எனச் செருக்கி நெஞ்சைத் தடவுதல். |
(80) |
| 7712. | ‘கல் அன்றோ, நீராடும் காலத்து, உன் கால் தேய்க்கும்- மல் ஒன்று தோளாய்!-வட மேரு? மானுடவன் வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும் சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது, தோன்றால்! |
மல் ஒன்று தோளாய் - (மற்போர்) வலி பொருந்திய தோள்களை உடையவனே; வடமேரு - வடக்கில் உள்ள மேருமலை; நீராடும் காலத்து - (நீ) நீராடும் பொழுது; உன் கால் தேய்க்கும் - உன் பாதத்தை (அழுக்குப் போகும்படி) தேய்ப்பதற்கு; கல் அன்றோ - (பயன்படும்) கல் அல்லவா? தோன்றால் - ஆடவர்களில் சிறந்தவனே; மானுடவன் வில் ஒன்று - (அத்தகு வலியுடை) உன்னை மனிதனின் வில்லில் (இருந்து வந்த) அம்புகளில் ஒன்று,; விளித்துளது என்னும் - இறக்குமாறு செய்தது என்கின்ற; சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது - சொல் அல்லவா என்னை மிகவும் வருத்தப்படச் செய்கின்றது. |
(81) |