(ப்பொங்கி) எழும்; ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் - கடலைக் காட்டிலும் பெருமுழக்கம் செய்தான். |
(151) |
அனுமனைத் தழுவி, இலக்குவன் சேனையின் நிலைமை உசாவுதல் |
| 8592. | ஆர்த்த பேர் அமலை கேளா, அணுகினன் அனுமன்; ‘எல்லா வார்த்தையும் கேட்கல் ஆகும்’ என்று, அகம் மகிழ்ந்து, வள்ளல் பார்ப்பதன் முன்னம் வந்த வணங்கினன், விசயப் பாவை தூர்த்தனை; இளைய வீரன் தழுவினன், இனைய சொன்னான்: |
ஆர்த்த பேர் அமலைகேளா - ஆரவாரித்த (அனுமனின்) பேரொலியினைக் கேட்டு; ‘அனுமன் அணுகினன்’ - அனுமன் (இங்கு) வந்து சேர்ந்தான்; எல்லாவார்த்தையும் கேட்கல் ஆகும் - (அவன் வாயிலாக) எல்லோருடைய செய்திகளையும் கேட்டறியலாம்; என்று அகம் மகிழ்ந்து - என்று தன்னுள்ளத்தே மகிழ்ச்சியுற்று; வள்ளல் பார்ப்பதன் முன்னம் - வள்ளன்மையுடையோனாகிய இலக்குவன், (அவ்வனுமனைத் திரும்பிப்) பார்ப்பதற்கு முன்னே; வந்து வணங்கினன் - (அவன் இலக்குவனை) அடைந்து வணங்கினான்; இளையவீரன் - (இராமனுக்கு) இளைய வீரனாகிய இலக்குவன்; விசயப்பாவை தூர்த்தனை - வெற்றி மங்கையைக் காமுற்றவனாகிய அனுமனை; தழுவினன் இனைய சொன்னான் - தழுவிக் கொண்டவனாய் (ப்பின்வருமாறு) இவ்வார்த்தைகளைக் கூறினான். |
விசயப்பாவை - வெற்றி மங்கை, தூர்த்தன் - காமுகன், அனுமன். அனுமன் நைட்டிக பிரம்மசாரியாக இருந்தும் பலரும் தழுவிய வெற்றி மங்கையை அவனும் தழுவியதாகக் கொண்டு அவனைத் தூர்த்தன் எனக் கூறிய நயம் உணர்ந்து மகிழ்தற்பாலது. பலருந்தழுவியவளைக் காமுகனையன்றிப் பிறர் தழுவாராதலின் தூர்த்தன் என்றார். |
(152) |
| 8593. | ‘அரி குல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன் பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே? |