இராவணன்) அப்படியானால் அரக்கர் சேனை எல்லாம் அழிவது நிகழ்ந்திருக்கும் என உடன்பட்டு உரைத்தான். |
(160) |
| 8601. | ‘வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை, மாயம் தந்தன தீர்ப்பான் போனான், உண்பன தாழ்க்க; தாழா எந்தை! ஈது இயன்றது’ என்றார். ‘மகோதரன் யாண்டை?’ என்ன, ‘அந்தரத்திடையன்’ என்றார். இராவணி, ‘அழகிற்று!’ என்றான். |
இராமன் வந்திலன் - இராமன் (போர் நிகழுமிடத்திற்கு) வந்தானல்லன்; வேறு ஓர் மலை உளான் - (அவன்) வேறு ஓர் மலையினிடத்தே தங்கியிருக்கின்றான்; மாயம் தந்தன தீர்ப்பான் உந்தை - நாம்பகைவர் மாட்டுச் செய்கின்ற மாயைகளை (அவர்களுக்கு முன்னறிவிப்புச் செய்து) தீர்ப்பவனாகிய உன் சிறிய தந்தை; உண்பன தாழ்க்கப் போனான் - (வானர சேனைகள்) உண்ணுதற்கு உரியனவாகிய உணவுகள் வரத் தாழ்த்தமையால் (அவற்றைக்) கொணர்தற்குப் (புறத்தே) போயினான்; ‘தாழா எந்தை! ஈது இயன்றது’ என்றார் - (செயலாற்றுவதில்) காலந்தாழாத எந்தை போல்பவனே! இதுவே (போர்க்களத்தில்) நிகழ்ந்ததாம் எனத் தூதர்கள் கூறினர்; ‘மகோதரன் யாண்டை?’ என்ன - (அதனைக் கேட்ட இந்திர சித்து ‘மகோதரன் எவ்விடத்துள்ளான்? எனவினவ; ‘அந்தரத்திடையன்’ என்றார் - ‘அவன் ஆகாயத்திடத்தே மறைந்தனன்’ என (தூதர்)க் கூறினர்; இராவணி ‘அழகிற்று’ என்றான் - இந்திரசித்து (மகோதரன் செயல்) ‘அழகாயிருக்கிறது என (இகழ்ந்து) கூறினான். |
(161) |
இந்திரசித்தன் பிரமாத்திரம் ஏவ வேள்வி செய்தல் |
கலித்துறை |
| 8602. | ‘காலம் ஈது’ எனக் கருதிய இராவணன் காதல். ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்; மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார். |