இராமன் தெய்வப்படைகளுக்கு வழிபாடு இயற்றிப் போர்க்களம் புகுதல் |
| 8628. | செய்ய தாமரை நாள்மலர்க் கைத் தலம் சேப்ப, துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன், ‘மொய்கொள் போர்க் களத்து எய்துவாம் இனி’ என முயன்றான். |
வீரன் - (வீரருள்) வீரனாகிய இராமபிரான்; செய்ய தாமரை நாள்மலர் - அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்ற; கைத்தலம் சேப்ப - (தனது) கைத்தலங்கள் மேலும் சிவக்கும்படி; துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் - தூய்மையும் தெய்வத்தன்மையும் உடைய உயர்ந்த (தனது) படைகளுக்கெல்லாம்; வரன்முறை துரக்கும் மெய்கொள் பூசனை - வரன்முறையாகச் செலுத்துதற்குரிய மெய்மையான வழி பாட்டினை; விதி முறை இயற்றி - செய்ய வேண்டிய முறைப்படி செய்து; மேல் - பிறகு, இனிமேல்; மொய்கொள் போர்க்களத்து - (வீரர்தம்) வலிமை விளங்கித் தோன்றும் போர்க்களத்திடத்து; எய்துவாம் என முயன்றான் - செல்வோம் என்று (புறப்படுதலாகிய) முயற்சியை மேற்கொண்டான். |
(188) |
| 8629. | கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்; அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்; வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்; தள்ளி, தாமரைச் சேவடி நுடங்குறச் சார்ந்தான். |
கொள்ளியின் சுடர் அனலிதன் - தீக்கொள்ளியினை யொத்துச் சுடர் விட்டொளிர்கின்ற அக்கினி தேவனது; பகழிகைக் கொண்டான் - அம்பினைத் தன் கையிற் கொண்டவனாகி; அள்ளி நுங்கலாம் - (கையினால்) அள்ளியெடுத்து விழுங்குதற்குத் தக்கவாறு; ஆர் இருட் பிழம்பினை அழித்தான் - திரண்டுள்ள அரிய இருளின் பிழம்பினைச் சிதைத்து அழித்தான்; தள்ளில் தாமரைச் சேவடி - தள்ளப் படுதற்கியலாத (சிறந்த) தாமரை போன்ற சிவந்த திருவடி; நுடங்குறச் சார்ந்தான் - அசைவுற்றுத் தளர நடந்து |