| 8638. | பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான்; குரு மணித் திரு மேனியும், மனம் எனக் குலைந்தான்; தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர, சாய்ந்தான்; உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான். |
அகம் பொருமினான் - (இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் தம்பியைக் கண்ட இராமன்) மனம் வெதும்பினான்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான் - வெகுளி மிகுந்தவனாகி உயிர்ப்பு முழுமையும் புகையுடன் தோன்றப் பெற்றான்; குருமணித் திருமேனியும் - நிறந்தாங்கிய நீலமணி போலும் (தனது) அழகிய உடம்பும்; மனம் எனக் குலைந்தான் - உள்ளம்போல நடுக்கமுற்றான்; தருமம் நின்று - அறக்கடவுள் (இத்துன்பநிலை கண்டு இரங்கி) நின்று; தன்கண்புடைத்து அலமரச் சாய்ந்தான் - தன் கண்களில் அடித்துக் கொண்டு வருந்துமாறு (நிலத்தில்) சாய்ந்தான்; உருமினால் இடியுண்டது ஓர் - இடியினால் தாக்கப்பட்டதொரு; மராமரம் ஒத்தான் - மராமரத்தை ஒத்து (த்தரையில்) வீழ்ந்தான். |
(198) |
| 8639. | உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்ந்திலன் ஒன்றும்; வியர்த்திலன், உடல்; விழித்திலன், கண் இணை; விண்ணோர், ‘அயிர்த்து இலன் கொல்?’ என்று அஞ்சினர்; அங்கையும் தாளும் பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன்-கருணையால் பிறந்தான். |
கருணையால் பிறந்தான் -(உயிர்கள் மீது வைத்த) பெரும் கருணை காரணமாக அவதரித்து வந்தவனாகிய இராமபிரான்; ஒரு நாழிகை உயிர்த்திலன் - ஒரு நாழிகைப் பொழுதளவும் மூச்சு விட்டிலன்; ஒன்றும் உணர்ந்திலன், - ஒன்றும் உணர்ந்தானில்லை; உடல் வியர்த்திலன் - உடல் வியர்வை கொள்ளவும் இல்லை; கண் இணை விழித்திலன் - இரு கண்களும் திறக்கவும் இல்லை; அங்கையும் தாளும் பெயர்த்திலன் - அழகிய கைகளும் கால்களும் |