இராவணன் கதறச் சீதை மகிழ்தல் |
7718. | அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து, பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்; தொண்டைக் கனி வாய் துடிப்ப, மயிர் பொடிப்ப, கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள். |
இனைய பகர்ந்து - இத்தகைய சொற்களைச் சொல்லி; அண்டத்து அளவும் அழைத்து - வானமுகட்டு அளவு அரற்றல் குரல் எட்டும்படி கூவி அழைத்து; பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான் - பழமையான தன் பெயரின் காரணத்தைப் பலரும் அறிய வளர்த்தான்; கெண்டைத் தடங்கண்ணாள் - கெண்டை மீன் போல் பிறழும் பெரிய கண்ணை உடைய சீதை; தொண்டைக் கனிவாய் துடிப்ப - கொவ்வைக் கனி போன்ற சிவந்த உதடுகள் துடிக்க; மயிர் பொடிப்ப - மயிர்க் கூச்செறிய; உள்ளே கிளுகிளுத்தாள் - மனத்தின் உள்ளே குதூகலிப்புக் கொண்டாள். |
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தல் - முன்பு கைலாய மலையை எடுக்க முயன்று அதன் கீழ் அகப்பட்டு அழுது கதறிய போது, சிவபெருமானால் அளிக்கப் பெற்ற பெயர் இராவணன் என்பது. இராவணம் - அழுகை (அல்) கதறல் என்று பொருள் படும். அழுகை காரணமாகப் பெற்ற பெயர் இது. பாரித்தல் - வளர்த்தல். உள்ளே கிளுகிளுத்தல் - துன்பம் கொண்டார்க்கு முன் தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டுதல் பண்பாடு உடையார் செயல் அன்று ஆகையால் இவ்வாறு கூறினார். வாய் துடித்தல், மயிர் பொடித்தல் - மகிழ்ச்சி காட்டும் மெய்ப்பாட்டுக் குறிகள். |
(87) |
7719. | வீங்கினாள் கொங்கை; மெலிந்த மெலிவு அகல ஓங்கினாள்; உள்ளம் உவந்தாள்; உயிர் புகுந்தாள்; தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை சேடி ஆம் பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்? |
கொங்கை வீங்கினாள் - (சீதை மகிழ்வால்) கொங்கை பூரித்தாள். மெலிந்த மெலிவு அகல ஓங்கினாள் - (உடல்) இளைத்த இளைப்பு எல்லாம் நீங்கப் பருத்தாள்; உள்ளம் உவந்தாள் - மனம் மிக மகிழ்ந்தாள்; உயிர் புகுந்தாள் - இதுவரை (அச்சத்தால் உயிர் |