வாழ்விக்கும் என்று எண்ணினென் - ஓர் நஞ்சினை (சீதையை) (இது நம்மை) வாழ்விக்கும் என்று எண்ணினேனாய்; முன்னே வருவித்தேன் - என்முன்னே வருவித்துக் கொண்டேன்; சூழ்வித்து - (என்னைச்) சூழ்ந்துவரச் செய்து; என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன் - என்னைச் சுற்றி இருந்தவர்களையும் சுட்டொழித்தேன்! இத்தனைகேடும் தருவித்தேன் - இத்தனை கெடுதிகளையும் உண்டாக்கிக் கொண்டேன்; தாழ்வித்தேனோ? - (இதன் பின்பும்) சிறிதேனும் பின்வாங்கினேனா? (இல்லை). |
(210) |
| 8651. | ‘மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும் புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்; பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்; எண்மேல் வைத்தேன், என் புகழ்; யான்தான் எளியேனோ! |
மண்மேல் வைத்த காதலின் - மண்ணிடத்தே வைத்த பற்றுக் காரணமாக; மாதாமுதலோர்க்கும் - (என்னுடைய) தாயார் முதலானோர்க்கும்; புண்மேல் வைத்த தீநிகர் துன்பம் புகுவித்தேன்- புண்ணிடத்தே தீ நுழைந்தாற் போன்ற பெருந்துன்பத்தை உண்டாக்கி விட்டேன்; பெண்மேல் வைத்த காதலின்- (சீதை என்னும்) பெண்ணிடத்தே வைத்துள்ள ஆசையினால்; இப்பேறுகள் பெற்றேன் - இத்தகையபயன்களை அடைந்தேன்; என்புகழ் எண்மேல் வைத்தேன் - எனது புகழ்த்திறங்களை (ஒன்றன் மேலொன்றாகப் பிறர் எண்ணி மதிக்குமாறு உயர்த்தினேன்; யான்தான் எளியேனோ? - நான்தான் வலியற்ற எளியவனோ? |
மண்மேல் வைத்த காதல் - தசரதன் கொடுப்பக் கொள்ள விசைந்த ஆட்சிக் காதல். இதனால் தந்தை இறப்பத்தாயார் முதலானோர்க் குற்ற பெருந்துயர். இதனைப் ‘புண்மேல் வைத்த தீ நிகர்துன்பம்’ என்றான். பெண்மேல் வைத்த காதல் என்றது சீதைவிரும்பியவாறு ஆராயாமல் மாயமான்பின் சென்றமை. இப்பேறுகள் என்றது, மனைவியை மாற்றான் கொண்டேகவும், அன்புத் தம்பியையும் ஆருயிர்த் தோழர்களையும் போரில் இழந்து வருந்தும் நிலையினை. எண்மேல் வைத்தல் - அளவுக்கு மேலாக உயர்த்துவைத்தல். புகழ் என்றது புகழுக்கு மாறாகிய பழியை உணர்த்தியது. எளியேனோ என்ற விடத்து ஓகாரம் எதிர் மறையாய் இரக்கமற்ற வன்னெஞ்சினேன் என்னும் பொருள் தந்து நின்றது. |
(211) |