துணை வந்து பிறந்தாய் - (எனக்குத்) துணையாகவந்து பிறந்தவனே! அறம், தாய், தந்தை, சுற்றமும் - அறம், அன்னை, தந்தை, உறவினர்; மற்றும் - மற்றுள்ள அனைத்தும்; அல்லால் துறந்தாய் - என்னைத்தவிர (உனக்குப் பற்றுதற்குரியனவல்லாவென) துறந்தாய்! பிரிவு ஆற்றாய் - பிரிந்திருக்கப் பெறாதவனாய்; என்னைப் பின்பு தொடர்ந்தாய் - என்னைப் பின்தொடர்ந்து (கானகத்திற்கு) வந்தவனே! என்றும் என்னை மறாதாய் - எக்காலத்தும் என்னை மறவாதவனே! இறந்தாய் - (இன்று என்னைப் பிரியும் படியாக) இறந்துபட்டாய்! உன்னைக் கண்டும் இருந்தேன் - அங்ஙனம் இறந்துபட்ட உன்னைக் கண்டும் நான் உயிர்தாங்கி இருந்தேன்! எளியேனோ? - வலியற்றவனாவேனோ? ஓகாரம் எதிர்மறை. | (213) | | 8654. | ‘சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்ட, ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால், மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல், தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா? | சான்றோர் மாதை - சான்றோர்களால் பாராட்டத்தகும் (கற்பென்னும் திண்மையையுடைய) பெண்ணை; தக்க அரக்கன் - அரக்கத் தன்மைக்குச் சான்றாக நிற்கும் அரக்கன்; சிறைதட்ட - சிறைப்படுத்தி வைக்க; ஆன்றோர் சொல்லும் நல் அறம் - கொடியவர்களை ஒறுத்தழிக்க வல்ல அறக்கடவுள் உண்டெனச் சான்றோர்களால் சிறப்பித்துக் கூறப்பெறும் நல்லறமும்; அன்னான் வயமானால் - அத்தகைய கொடியவனின் கொடுமைக்கு உட்பட்டு அடங்கிச் செயலற்றுப் போகுமானால்; மூன்றுஆய் நின்ற பேர் உலகு - (மேல், கீழ், நடுஎன) மூவகையாய் நிலை பெற்றுள்ள பெரிய உலகங்கள் யாவும்; ஒன்றாய் முடியாவேல் - ஒருசேர அழிந்து போகாமல் இருக்குமானால்; என் வில்வலி வீரத் தொழில் - என்னுடைய வில்லின் வன்மை காட்டும் வீரத் தொழில்; தோன்றாவோ - உலகோர்க்கு நன்கு விளங்கித் தோன்றாதோ? | அம்மா - அசை. | (214) |
|
|
|