| 8655. | ‘வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும், காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும், மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும், வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா? | வேலைப் பள்ளக்குண்டு அகழிக்கும் - கடற்பள்ளமாகிய ஆழ்ந்த அகழியை (அணைகட்டிக்) கடத்தற்கும்; விராதற்கும் - விராதனைக் கொல்லுதற்கும்; காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும் - கால்கொண்டு நடக்கவியலாத கவந்தனது உயிரைக் கவர்வதற்கும்; கரனுக்கும் - கரன் என்னும்அரக்கனை அழிப்பதற்கும்; மூலப் பொத்தல் செத்த -ஆணிவேரின் கண் துளையுற்று பட்டுப்போன; ஏழ் மரத்து முதலுக்கும் - ஏழு மராமரங்களின் முதலைத் துளைத்தற்கும்; வாலிக்கும்மே - வாலியைக் கொல்லுதற்கும் மட்டுமே; ஆயினவாறு என் வலி அம்மா - ஆகித் தீர்ந்தொழிந்தது எனது வன்மையனைத்தும்! (அந்தோ! இரங்கத்தக்கதே). | ‘எனது வலிமையனைத்தும் அற்பமாகிய கடற்பள்ளத்தைக் கடப்பதற்கும், விராதன், கவந்தன், கரன் முதலான சாதாரணர்களைக் கொல்லுதற்கும், குறையுடைய மராமரங்களைத் துளையிடுதற்கும், வாலியென்னும் வானரனைக் கொல்லுதற்குமாகத் தீர்ந்தொழிந்ததே’ என இரங்குகின்றான் இராமன். அம்மா வியப்பிடைச்சொல். குண்டு - ஆழம், ‘திண்டோர் குழித்த குண்டு நெடுந்தெருவின்’ (பெரும்பாண்-397) ‘அருங் குழுமிளைக் குண்டு கிடங்கின்’ (மதுரைக்-64) என்பனகாண்க. | ‘காலின் செல்லும்’ - என்பதற்குப் பதிலாகக் காலின் செல்லா எனப் பாடங்கொள்ளப் பெற்றது. | (215) | | 8656. | ‘இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனா? வருந்தேன்; “நீயே வெல்லுதி” என்னும் வலி கொண்டேன்; பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன்! | வருந்தேன்-வருத்தம் இல்லாதேனாகி; “நீயே வெல்லுதி” என்னும் வலி கொண்டேன் - ‘நீயே (இந்திரசித்தைப் போரிற் கொன்று) வெற்றியடைவாய்’ என்னும் (மன) வலிமையைக் கொண்டு இருந்தேன்; இருந்தேனானால் - (இனி, நின்னை இழந்த |
|
|
|