| பொன்றும் என்னாத் தம்பியை ஆர்வத்தொடு புல்லி, ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான். |
என்று என்று ஏங்கும் - என்று என்று இவ்வாறு புலம்பி வருந்துவான்; விம்மும் உயிர்க்கும் - மனம் விம்முவான்; பெருமூக்சு விடுவான்; இடைஅஃகிச் சென்று - இடை இடையே (நெட்டுயிர்ப்பு அடங்கிச் சென்று; இந்தியம் எல்லாம் ஒன்றோடு ஒன்று சிதைவு எய்த - (கண்முதலிய) பொறிகளெல்லாம் (தத்தம் புலன்களைக் கொள்ளுதலின்றி) சிதைந்து கெட; பொன்றும் என்னா - ‘இறந்தொழிவோம்’ என்று; தம்பியை ஆர்வத்தோடு புல்லி- தம்பியை மார்போடு இறுகத் தழுவிக்கொண்டு; ஒன்றும் பேசான், தன்னை மறந்தான், துயில்வுற்றான் - ஒன்றும் பேச இயலாதவனாகி தன்னை மறந்து உறங்கிக் கிடந்தான் (இராமன்). |
(220) |
தேவர்கள் இராமனுக்கு உண்மை உணர்த்துதல் |
8661. | கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்; கொண்டார், துன்பம்; ‘என் முடிவு?’ என்னாக் குலைகின்றார்; ‘அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்; உண்டோ உன்பால் துன்பு?’ என அன்பால் உரை செய்தார். |
விண்ணோர் கண்டார் - (இராமனுற்ற இப்பெருந்துயரை) தேவர்கள், கண்டனர்; கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் - (அதனைக் கண்டமைக்காக இரங்கி) தம்முடைய கண்களில் மோதி அறைந்து கொண்டவர்களாய் அழுவாராயினர்; துன்பம் கொண்டார் - (எல்லையற்ற) துன்பத்தினை மேற்கொண்டார்கள்; ‘என் முடிவு?’ என்னாக் குலைகின்றார் - ‘முடிவில் நிகழப் போவது யாதோ?’ என அஞ்சி நடுங்குகின்றார்கள்; “அண்டா! ஐயா!” - ‘அண்டம் முழுவதும் ஆனவனே! (எம்முடைய) தலைவனே! உன்பால் துன்பு உண்டோ?’ - (இறைவனாகிய) உன்னிடத்துத் துன்பம் என்பது உளதோ? எங்கள் பொருட்டால் அயர்கின்றாய் - (நின் அன்பர்களாகிய) எங்கள் பொருட்டாகவே (இத்தகைய துன்பங்களை மேற்கொண்டு) தளர்ந்து வருந்துகின்றாய்! என |