கங்காதேவி அழுதாள், அயனார் நாவில் வீற்றிருக்கும் கலைமகள் அழுதாள்; கமலத்தடங்கண்ணன் தங்கை அழுதாள்-தாமரைமலர் போன்ற கண்களை உடைய திருமாலின் தங்கையான கொற்றவை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் - இரங்காத வன்னெஞ்சராகிய அரக்கிமாரும் தம் வன்மை தளர்ந்து அழுதார். |
கணவனை இழந்ததாகக் கருதிச் சீதை அழும் துன்பத்தைக் கண்டு கணவனோடு வாழும் மகளிரும், மற்றையோரும் அழுதனர் என்றவாறு. கண்ணன் தங்கை - கொற்றவை வெற்றித்திருமகளான இவள் அழுததோடன்றி, சீதையைக் காவல்காப்பவரும், வன்னெஞ்சரும் ஆன அரக்கியரும் தளர்ந்து அழுதனராம். தெய்வப் பெற்றிமை உடைய தேவிமாரின் பெண்மை அவலப்பட்டது பெரிதன்று; பொதுவாக இரக்கம் கொள்ளாத அரக்கியரும்கூடச் சீதை துயர் கண்டு அழுதனராம்; அரக்கியரும் என்பது எண்ணும்மை அன்று; சிறப்பும்மையாகிறது என்பது டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் கருத்து. |
(5) |
8676. | பொன் தாழ் குழையாள்தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்; குன்றா மறையும், தருமமும், மெய் குழைந்து குழைந்து, விழுந்து அழுத; பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத; பின் என் பிறர் செய்கை? நின்றார் நின்றபடி அழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள்.* |
பொன்தாழ் குழையாள் தனை ஈன்ற - பொன்னாற் செய்யப் பெற்றுக் காதில் தொங்குகின்ற குழை என்னும் அணியை அணிதற்குரியவளான சீதையைப் பெற்றதாயாகிய; பூமாமடந்தை புரிந்து அழுதாள் - பூமாதேவி எனும் பெண் மனம் இரங்கி அழுதாள்; குன்றாமறையும் தருமமும் - தன் இயல்பில் குன்றாது என்றும் ஒருதன்மைத்தாக இருக்கும் வேதங்களும் தருமமும்; மெய்குழைந்து குழைந்து விழுந்து அழுத - மெய் நெகிழ்ந்து, நெகிழ்ந்து விழுந்து அழுதன; பின்றாது உடற்றும் பெரும் பாவம் - பிற்படாமல் முற்பட்டு வந்து வருந்துகின்ற பெரும் பாவமும்; அழுதபின் என்பிறர் செய்கை- அழுதபின்பு பிறர் செய்கையை என்னென்பது?; நின்றார் நின்றபடி அழுதார் - ஆங்காங்கிருந்தவர் (மதிமயங்கி) நின்றது நின்ற வண்ணம் புலம்பினர்; நினைப்பும் |