இலக்குவருடைய பச்சை இரத்தத்தால்,; எம்பிக்கு - என் தம்பியாகிய கும்பகருணனுக்கு; முக்கைப் புனல் உகுப்பேன் - மூன்று முறை கையால் இறைத்தல் ஆகிய நீர்க்கடன் செய்வேன்; என முனியா - என்று சினந்து; தீ விழியான் போயினான் - (சினத்தால்) தீ வெளிப்படும் கண்களை உடையவனாய்ச் சீதை இருக்கும் இடத்தை விட்டு) அப்பால் போனான்.
|
முக்கைப் புனல் உகுத்தல். இறந்தவர்க்கு மூன்று முறை கையொலி நீர் இறைத்துச் செய்யும் நீத்தார்கடன். மந்திரியார் - உடன் இருந்த மகோதரனை மட்டும் குறித்தது. இழிப்பினால் ஒருமையைப் பன்மையாகக் கூறினார் என்க. முனியா - செய்யா என்னும் வாய்பாட்டு இறந்த கால உடன்பாட்டு வினை எச்சம்.
|
(91)
|
மகோதரன் போதல்
|
7723. | ‘கூறோம், இனி நாம்; அக் கும்பகருணனார் பாறு ஆடு வெங் களத்துப் பட்டார்’ எனப் பதையா, ‘வேறு ஓர் சிறை இவனை வைம்மின் விரைந்து’ என்ன, மாறு ஓர் திசை நோக்கிப் போனார், மகோதரனார்.
|
இனி நாம் கூறோம் - இனிமேல் நாம் (வேறு ஒன்றும்) சொல்வதற்கில்லை (ஏனெனில்); அக்கும்பகருணனார் பாறு ஆடு வெங்களத்துப் பட்டார் - அந்தக் கும்பகருணனார் பருந்துகள் பறக்கின்ற கொடிய போர்க்களத்தில் இறந்து அழிந்தார்; எனப் பதையா -என்று சொல்லி உடல் பதைத்து; இவனை வேறு ஓர் சிறை விரைந்து வைம்மின் என்ன - இந்த மாயாசனகனை மற்றொரு சிறையில் விரைவாக அடைத்து வையுங்கள் என்று சொல்லிவிட்டு; மகோதரனார் மாறு ஓர் திசை நோக்கிப் போனார் - மகோதரன் வேறு ஒரு திசையை நோக்கிப் போனார்.
|
மகோதரன் இராவணனுடன் செல்லாது வேறு ஓரு திசையில் செல்லுதல், தான் கூறியே கும்பகருணனைப் போருக்கு அனுப்பியதை எண்ணி இராவணன் தன் மீது சினந்து சீறுவானோ என்ற அச்சத்தால் என்க. பாறு - பருந்து, மாறு ஓர் திசை - வேறு ஓரு திசை, பதையா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினைஎச்சம். மகோதரனார் - பன்மை இழிவுக்குறிப்பு.
|
(92) |