பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 693

8797.வேர்த்துள தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன, மலையொடு மரனும், முன்புபோல்
தூர்த்தன, வேலையை; காலின் தோன்றலும்,
ஆர்த்தனன், அனையவர் அரந்தை ஆற்றுவான்.
 

வேர்த்துள  தூரொடு  விசும்பை   மீச்செலப்   போர்த்தன -
வேரோடு கூடிய புதரினோடும்,  வானத்தின்     மேல்     செல்லுமாறு
மூடிக்கொண்டுள்ள;மலையொடுமரனும்  முன்பு  போல்  வேலையைத்
தூர்த்தன
 -  மலையோடு மரமும் அணைகட்டிய காலத்தைப்  போலக்
கடலைத்   தூர்த்தன;   காலின்  தோன்றலும்  -  காற்றின்  மகனான
அனுமனும்;   அனையவர்  அரந்தை  ஆற்றுவான்  ஆர்த்தனன் -
அங்குள்ள  சாம்பவன்   முதலானோரின்  துன்பத்தை   (முன்கூட்டியே
போக்குதற்காக) ஆரவாரித்தான்.
 

தூர் - புதர்.
 

                                                 (95)
 

8798.மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும் மண்-
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள,
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்-
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே.
 

உழுவையின்  சினத்தவன்   ஆர்த்த  ஓசையே  -  புலிபோன்ற
கோபத்தையுடைய    அனுமன்   ஆரவாரித்த    ஓசையானது;   மண்
உழையவும்  விசும்பவும் ஒலித்தற்கு  ஒத்துள
 -  தரையிடத்தனவும்,
வானிடத்தனவுமாய்    ஒலி      செய்தற்குரியனவாகிய;    கடல்களும்
மழைகளும்  மற்றும்  முற்றும்
 -  கடல்களும்,  மேகங்களும் மற்றும்
அவைபோல்    ஒலி    செய்தற்கு    உரியனவாயுள்ள   அனைத்தும்;
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால் - ஒன்று சேர்ந்தனவாய்
ஆரவாரித்த தன்மையைக் கொண்டன.
 

                                                  (96)
 

8799.எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள்,
‘செறி சுடர் மந்தரம் தருதி, சென்று’ என,
‘வெறிதுகொல்!’ எனக் கொடு, விசும்பின் மீச்செலும்
உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான்.
 

எறிதிரைப் பெருங்கடல்கடைய ஏற்றநாள் - வீசுகின்ற அலைகளை
உடைய    பெரிய    திருப்பாற்கடலைக்    கடைதற்கு   (தேவர்களும்
அசுரர்களும்) ஏன்று கொண்ட நாளில்; ‘செறிசுடர்