பக்கம் எண் :

696யுத்த காண்டம் 

8804.கழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்து
அழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள்
சுழன்றன; உலகு எலாம் தொழுவ; தொங்கலின்
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான்.
 

கழன்றன    நெடுங்கணை கரந்த புண் - உடம்பில் தைத்திருந்த
நீண்ட    அம்புகள்தாமே     கழன்று    வீழ்ந்தன;   அவற்றாலாகிய
புண்களெல்லாம்   தாமே  மறைந்தன;  கடுத்து  அங்கம்  அழன்றில
குளிர்ந்தன
  -   வலிமிகுந்திருந்த    அங்கங்கள்  அழற்சி  இன்றிக்
குளிர்ந்தன;  செங்கண்கள்  சுழன்றன  -  (கோபத்தால்) சிவந்திருந்த
கண்கள் சுழலத் தொடங்கின; உலகு எலாம் தொழுவ - உலகனைத்தும்
தொழுவனவாயின; தொங்கலின் குழன்ற  பூங்  குஞ்சியான் உணர்வு
கூடினான்
 -  மாலை  போன்று  சுருண்ட  அழகிய   மயிர்  முடியை
உடைய இலக்குவன் தன் உணர்வு வரப்பெற்றான்.
 

                                                 (102)
 

8805.யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல்
தாவரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,-
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான்
யோகம் நீங்கினன் என,-இளவல் ஓங்கினான்.
 

யாவரும்     எழுந்தனர்  -  வானரர்  யாவரும்  உயிர்  பெற்று
எழுந்தனராய்; ஆர்த்த,  ஏழ்கடல்  தாவரும்  பேர்ஒலி  செவியில்
சார்தலும்
    -    ஆரவாரித்த    ஏழுகடலின்    ஒலி    போன்ற
கெடுதலில்லாதபெரிய   ஆரவாரம்   தன்   செவியில்   சேர்ந்தவுடன்;
தேவர்கள்  வாழ்த்தொலிகேட்ட  செங்கணான்  -  தேவர்களுடைய
வாழ்த்தொலியைக்    கேட்ட  சிவந்த  கண்களை   உடைய  திருமால்;
யோகம்   நீங்கினான்  என  இளவல்   ஓங்கினான்   -   யோக
நித்திரையிலிருந்து எழுந்தான் போல இலக்குவன் எழுந்து நின்றான்.
 

                                                 (103)
 

                        இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல்
 

8806.ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர்
நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில,
தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்.