பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 697

உயிர் வந்து  உள்  உற  ஓங்கிய  தம்பியை  -  உயிர்  வந்து
உடம்பினுள்  பொருந்தியதினால்   உணர்வு   பெற்ற   எழுந்த  தம்பி
இலக்குவனை;  இராமனும் வீங்கிய தோள்களால் தழுவி  வெந்துயர்
நீங்கினான்
- இராமனும் தன் பூரித்த தோள்களால்  தழுவிக்  கொண்டு
கொடிய  துன்பம்  நீங்கப்  பெற்றான்;  உலகில்  உள தீங்கு நின்றில
- உலகில் தீங்காக  உள்ளன  எல்லாம்  நில்லாமல் சென்றன; தேவரும்
மறுக்கம் தீர்ந்தனர்
- தேவர்களும் கலக்கம் நீங்கினார்கள்.
 

                                                 (104)
 

8807.
 

அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை,
நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா
பரம்பின; முனிவரும் வேதம் பாடினார்.
 

அரம்பையர்     ஆடினர் - அரம்பையர்கள்  ஆடினர்; அமிழ்த
ஏழ்இசை நரம்பு இயல் கின்னரம்  முதல  நன்மையே நிரம்பின
-
அமிழ்தம்     போன்ற     இனிய     ஏழிசையை     யெழுப்புகின்ற
நரம்பினாலியன்ற    கின்னர    முதலிய    இசைக்கருவிகளின்   ஒலி
(உலகெலாம்) நிரம்பின;உலகு எலாம் உவகை நெய்விழா பரம்பின -
உலகெங்கும்   மகிழ்ச்சியால்   செய்யும்   நெய்யாடல்  விழா  பரவின;
முனிவரும் வேதம் பாடினார் - முனிவர்களும் வேதம் பாடினார்கள்.
 

                                                 (105)
 

8808.

வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன, தேவர் சிந்தனை.
 

வேதம்    நின்று  ஆர்த்தன - வேதங்கள் மகிழ்ச்சியோடு நின்று
ஆரவாரித்தன; வேத  வேதியர் போதம் நின்று ஆர்த்தன - வேதம்
பயின்ற  அந்தணர்  தம்   அறிவு நிலைபெற்று ஆரவாரித்தன; புகழும்
ஆர்த்தன;  ஓதம்  நின்று  ஆர்த்தன
  -  புகழும்   ஆரவாரித்தன;
கடல்கள்  நின்று  ஒலி செய்தன;  ஓத வேலையின் தேவர் சிந்தனை
சீதம் நின்று  ஆர்த்தன
  -  அலைகளோடு  கூடிய  கடலைப்போல்
தேவர்களின் சிந்தனையும் குளிர்ச்சியோடு நின்று ஆரவாரித்தன.
 

                                                 (106)