பக்கம் எண் :

698யுத்த காண்டம் 

                                         அயன்படை அகலுதல்
 

8809.‘உந்தின பின் கொலை ஒழிவு இல் உண்மையும்
தந்தனை நீ; அது நினக்குச் சான்று’ எனா,
சுந்தரவில்லியைத் தொழுது, சூழ வந்து,
அந்தணன் படையும் நின்று, அகன்று போயதால்.
 

கொலை    உந்தினபின் - கொலை நீங்கின பின் (யாவரும் உயிர்
பெற்றெழுந்தபின்); அந்தணன் படையும் சுந்தர வில்லியை சூழவந்து
தொழுது நின்று
- பிரமாத்திரமும்  அழகிய வில்லாளனான இராமனைச்
சுற்றி   வந்து வணங்கி,  எதிர்நின்று;  நீ  ஒழிவு  இல்  உண்மையும்
தந்தனை
  -  நீ,   நீங்குதலில்லாத   சத்தியத்தையும்  தந்தாய்;  அது
நினைக்குச் சான்று எனா  அகன்று  போயதால்
 -  அது உனக்குப்
பெருமையே எனக் கூறி நீங்கிச் சென்றது.
 

ஆல்  -   அசை.   ‘பிரமபாணம்  இராமனை  வணங்கி  வாழ்த்திச்
சென்றது என்றவாறு.
 

                                                 (107)
 

சந்தக் கலிவிருத்தம்
 

8810.ஆய காலையின், அமரர் ஆர்த்து எழ,
தாயின் அன்பனைத் தழுவினான்,-தனி
நாயகன், பெருந் துயரம் நாம் அற,
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான்.
 

ஆயகாலையின்    தனி  நாயகன்  -  அது  போழ்து  ஒப்பற்ற
தலைவனாகிய  இராமன்; பெருந்துயரம்  நாம்  அற  - (முன்பிருந்த)
பெருந்துயரமும்   அச்சமும்   ஒழிதலால்;  தூயகாதல்  நீர்  துளங்கு
கண்ணினான்
 -  தூய்மையான  அன்புக் கண்ணீர்தளும்பும் கண்களை
உடையவனாய்;தாயின் அன்பனை அமரர் ஆர்த்தெழத் தழுவினான்
-    தாய்     போன்ற     அன்பனாகிய   அனுமனைத்   தேவர்கள்
மகிழ்ச்சியினால் ஆரவாரித்து எழாநிற்கத் தழுவிக் கொண்டான்.
 

நாம்     - அச்சம். இராமனுடைய துயரமும் அச்சமும் அகன்றதால்
‘தூய  காதல்  நீர்  துளங்கு  கண்ணினான்” என்றார். அறம்  தழைக்க
அனைவரும்      உயிர்த்தெழவும்,        உலகம்         உய்யவும்
காரணமாயிருந்தமையின் அனுமன் “தாயின் அன்பன்” எனப்பட்டான்.
 

                                                (108)