| 8811. | எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு உழுத மார்பினான், உருகி, உள் உறத் தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத் தொழுத மாருதிக்கு, இனைய சொல்லினான்: |
எழுது குங்குமத் திருவின் ஏந்துகோடு உழுதமார்பினான் - (தொய்யிற்கோலமாக) எழுதிய குங்குமத்தினை உடைய திருமகளின் அமிசமான சீதையின் உயர்ந்த யானைக் கொம்பு போன்ற தனங்களால் உழப்பட்ட மார்பினை உடைய இராமன்; உருகி உள்உறத் தழுவி நிற்றலும் - உருகி மனம் பொருந்தத் தழுவி நின்ற அளவில்; தாள்உறத் தாழ்ந்து தொழுத மாருதிக்கு - அவன் பாதத்தில் பொருந்துமாறு தாழ்ந்து வணங்கிய அனுமனுக்கு; இனைய சொல்லினான் - இத்தன்மையான சொற்களைச் சொன்னான் (இராமன்). |
(109) |
இராமன் அனுமனைப் புகழ்ந்து, வாழ்த்துக் கூறுதல் |
| 8812. | ‘முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது, என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர் மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்; நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்! |
முன்னின் தோன்றினோர் முறையில் நீங்கலாது - முன் எம் குலத்தில் தோன்றினோரது முறைமையினின்றும் நீங்காமலிருந்து; என்னின் தோன்றிய துயரின் - என்னால் தோன்றிய துயரின்; ஈறுசேர் மன்னின் முன்னம் தோன்றினோம் - இறந்த தசரத மன்னனிடத்தில் முன்னம் தோன்றினோம்; மாண்டுளோம் - (பின்பு பிரமாத்திரத்தால்) இறந்துபட்டோம்;நெறியின் தோன்றினாய் நின்னின் தோன்றினோம் - நன்னெறியில் விளங்குபவனே! (இப்போது) நின்னால் மீண்டும் பிறந்தவர்களானோம். |
முன்னில் தோன்றினோர் முறை - வாய்மை தவறாமை. என்னில் தோன்றிய துயர் - காடு நோக்கித்தான் பிரிந்ததால் ஆயதுயர். ஈறு - இறுதி. ஈறுசேர் மன்னன் - தயரதன். “முன்பு தயரதமன்னனின் மக்களாகப் பிறந்த நாங்கள் மாண்டுவிட்டோம். இப்பொழுது நின்னில் தோன்றியுள்ளோம்” என அனுமனை இராமன் பாராட்டுகின்றான். |
(110) |