அடியனேனுக்கு இரங்குவது என்றுதான் - அடியேன் ஆகிய என் பொருட்டு (சீதையே) நீ மனத்தில் இரக்கம் கொள்வது என்று தான்? என்பால் இரவியோடு இந்து என்பான் வேற்றுமை தெரிவது என்றுதான் - என்னிடம் கதிரவனுக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள வேறுபாடு அறியத் தோன்றும் நிலை என்றுதான்; அனங்க வாளிக்கு - உருவமற்ற மன்மதனின் மலரம்புகளுக்கு; இலக்கு அலாதிருக்கலாவது என்று தான் - இலக்கு ஆகாமல் இருக்கல் ஆவது என்றுதான்? என்று - என்று; தான் உற்றது எல்லாம் - தான் அடைந்த காம வருத்தங்களை எல்லாம்; இயம்புவான் எடுத்துக் கொண்டான் - சொல்வதற்காக எடுத்துக் கொண்டான்.
காம வயப்பட்டவர்க்கு நிலவும் வெப்பமாய்த் தோன்றும் என்ற மரபினை மனங்கொண்டு இந்துவோடு இரவி என்பான் வேற்றுமை தெரிவது என்று என்றார். என்றுதான் என்ற தொடர் இராவணனின் காம மிகுதி சார் எதிர்பார்ப்பைக் காட்ட நான்கு முறை வந்துள்ளது. தான் - நான்கனுள் முதல் மூன்று அடிகளில் வருபவை அசை. நான்காம் அடியில் வருவது - படர்க்கை ஒருமைப் பெயர்ச்சொல். உற்றது எல்லாம் - ஒருமை பன்மை மயக்கம்.
(9)
7641.
‘வஞ்சனேன் எனக்கு நானே, மாதரார் வடிவு கொண்ட, நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன்; நாளும் தேய்ந்த நெஞ்சு நேரானது; உம்மை நினைப்பு விட்டு, ஆவி நீக்க அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம், அமுதின் வந்தீர்!
அமுதின் வந்தீர் - அமுதத்துடன் அவதரித்தவரே! வஞ்சனேன் - வஞ்சனைத் தன்மையுடைய; நானே எனக்கு - நான் எனக்காக; மாதரார் வடிவு கொண்ட - பெண்பாலார் உருவத்தைக் கொண்ட; நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் - நஞ்சு கலந்த அமுதத்தை உண்ண விரும்பினேன்; நாளும் தேய்ந்த நெஞ்சு நேரானது - நாளுக்கு நாள் தேய்ந்த (என்) நெஞ்சு நேர்மைப் பண்பைக் கொண்டு விட்டது உம்மை நினைப்பு விட்டு - உம்மை நினைப்பதை விட்டு; ஆவி நீக்க அஞ்சினேன் - உயிரை விடுவதற்கு (நான்) அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம் - அடியவனாகிய நான் நுமக்கு அடைக்கலப் பொருள்.