8813. | ‘அழியுங்கால் தரும் உதவி, ஐயனே! மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே? பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமை வழியும் காத்தனை; நம் மறையும் காத்தனை. | ஐயனே! அழியுங்கால் தரும் உதவி மொழியுங்கால் - ‘ஐயனே! எல்லோரும் அழியுங்காலத்தில் நீதந்த உதவியைச் சொல்லுமிடத்து; தரும் உயிரின் முற்றுமோ? - இப்போது தரப்பட்ட உயிரோடு முற்றுப் பெற்றதாகுமோ (ஆகாது); பழியுங் காத்து அரும் பகையும் காத்து - (நீ தந்த உதவியால்) எமக்கு வரும் பழியையும் வாராமல் காத்து; அரிய எம்பகையும் வலிமிக்கு உலகை அழிக்காமல் காத்து; எமை வழியும் காத்தனை நம் மறையும் காத்தனை - எம்மரபையும் அழியாமல் காத்து நமது வேத நெறியையும் அழியாமல் காப்பாற்றினாய்’. | ‘ஐயனே! நீ எமக்கு உயிர்மட்டுமா தந்துளாய்? பழி, பகை, வழி, மறை ஆகிய அனைத்தையுமல்லவா காப்பாற்றியுள்ளாய்’, என்கிறான்’. பழி - சீதையை மீட்காமை, முனிவர்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமை. பகை - வலிமைமிகுந்து உலகை அழிக்காமை. வழி - இலக்குவன் இறக்கவே இராமனும், தொடர்ந்து பரதசத்துருக்கர் ஆகியோர் இறக்கச் சூரியகுலம் வழியற்றுப் போதல். | (111) | 8814. | ‘தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே, வாழி எம்பிமேல் அன்பு மாட்ட, வான் ஏழும் வீயும்; என் பகர்வது?-எல்லை நாள் ஊழி காணும் நீ, உதவினாய்அரோ! | தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே - எனக்கு நேர்ந்த இத்தாழ்வும் இவ்விடத்தில் இன்னும் சிறிது போழ்து (நீக்கப்படாமல்) தாழ்ந்திருக்குமாயின்; வாழி எம்பிமேல் அன்பு மாட்ட - நெடிது வாழ்வதற்குரிய என் தம்பி மேல் எனக்கிருக்கும் அன்பானது அழிக்க; வான் ஏழும் வீயும்; என் பகர்வது - மேலேழுகங்களும் அழிந்திருக்கும் என்ன சொல்வது? ஊழி எல்லை நாள் காணும் நீ - ஊழியின் இறுதி நாளையும் காணப்போகின்ற நீ; உதவினாய் - அவ்வுலகங்கள் அழியாமலிருக்க உதவி செய்தாய். | அரோ - அசை. | (112) |
|
|
|