பக்கம் எண் :

702யுத்த காண்டம் 

பொய்க்குமால்    -  பொய்  மனத்தவராகிய  பகைவர்  இறத்தல்
பொய்த்துவிடும்.   (இறந்த அரக்கர் மீண்டும் உயிர் பெறுவர் என்றபடி);
மொய்த்த  குன்றை  அம்மூல   ஊழிவாய்  வைத்து  மீடியால் -
(ஆதலால்) மருந்துகள்  நெருங்கி   உள்ள   இம்மலையினை  அந்தப்
பழைய இடத்தில் வைத்து விட்டுத் திரும்புவாயாக.
 

என்று  சாம்பவன் இயம்ப என அடுத்த செய்யுளில் முடியும். மீள்தி
என்பது    மீடி   எனத்    (ளகரத்தோடு   தகரத்திற்கு   மயக்கவிதி
இன்மையால்) திரிந்து நின்றது.
 

                                                 (115)
 

8818.என்று சாம்பன் ஆண்டு இயம்ப, ‘ஈதுஅரோ
நன்று, சால!’ என்று, உவந்து, ‘ஒர் நாழிகைச்
சென்று மீள்வென்’ என்று எழுந்து, தெய்வ மாக்
குன்று தாங்கி, அக் குரிசில் போயினான்.
 

என்று   சாம்பவன் ஆண்டு இயம்ப - என்று சாம்பவன் அங்கு
சொல்ல; ஈது அரோ சால  நன்று  என்று  உவந்து - ‘இது மிகவும்
நல்லது’ என்று  மகிழ்ந்து;‘ஒர் நாழிகைச் சென்று மீள்வென்’ என்று
எழுந்து
 -  ‘ஓர் நாழிகையிலே  சென்று திரும்புவேன்’ என்று எழுந்து;
தெய்வமாக் குன்று  தாங்கி    அக்குரிசில்    போயினான்    -
தெய்வத்தன்மையுடைய  பெரிய  மருத்துமலையைத் தாங்கிக்  கொண்டு
அந்த அனுமன் போயினான்.
 

அரோ  -  அசை  ஈது சால  நன்று  என  இயையும்.  குரிசில்  -
ஆண்மகன்.
 

                                                 (116)