பக்கம் எண் :

714யுத்த காண்டம் 

பவளவாயார்  ஆடலும், அமிழ்தின் ஆன்ற பாடலும் - பவளம்
போன்ற   வாயினை    உடைய  பெண்களின்  ஆடலும்,  அமுதினும்
இனிதாய்  அமைந்த அவர்  பாடலும்; முழவின் தெய்வப்பாணியும் -
அப்பாடலுக்கேற்ற  மத்தளத்தின்  தெய்வத்தன்மை   வாய்ந்த ஓசையும்;
களியின்  வந்த  அமலையும் - அவற்றைக் காண்போரின் களிப்பால்
வந்த  ஆரவாரமும்;ஊடலும்,  கடைக்கண் நோக்கும் -  (அம்மகளிர்
மீது ஆசை கொண்டு நோக்குவோர்க்கு அம்மகளிர்  காட்டும்) ஊடலும்,
(அவ்வூடலால்  அவ்வாடவர்  வருத்தம் கண்டு இரங்கி  அம்மகளிர்தம்
இசைவைத்   தெரிவிக்கும்)   கடைக்கண்  நோக்கமும்;  மழலைவெவ்
உரையும்  எல்லாம்
 -  அவ்வாடவரிடத்து  அம்மகளிர் பேசும் காம
வெப்பத்தை  மிகுவிக்கும்  மழலைத் தன்மையுடைய  உரையும்  ஆகிய
அனைத்தும்;ஆர்ப்பு ஒல வருதலோடும் வாடல் மென்மலரே ஒத்த
- வானரர்தம்  ஆரவாரப்பேரொலி  வந்தவுடன்  வாடிய  மலர்போலப்
பொலிவழிந்து போயின.
 

                                                 (18)
 

8837.தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க,
துறு சுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க,
செறி கழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது அன்றே-
எறி கடல் கடைந்த மேல்நாள், எழுந்த பேர் ஓசை என்ன.
 

தறி  பொருகளி   நல்யானை   சேவகம்   தள்ளி   ஏங்க -
கட்டுத்தறியையும்    முறிக்கின்ற     மதக்களிப்பினையுடைய    நல்ல
யானைகள் தாம் படுத்த விடங்களில்  திடுக்குற்று வருந்தவும்; துறுசுவல்
புரவி தூங்கித் துணுக்குற,  அரக்கர்  உட்க
 -  நெருங்கிய  பிடரி
மயிரினை   உடைய   குதிரைகள்   துணுக்குற்றுச்  சோரவும்  காலாள்
வீரராகிய   அரக்கர்கள் அஞ்சவும்;  ஏறிகடல்  கடைந்த  மேல்நாள்
எழுந்தபேர்   ஓசை என்ன
 -  அலைகள்  வீசுகின்ற  பாற்கடலைக்
கடைந்த  முந்காலத்து எழுந்த  பேரொலி  போல; செறிகழல் இருவர்
தெய்வச்    சிலை  ஒலி    பிறந்தது
  -   வீரக்கழல்   அணிந்த
இராமஇலக்குவரின்  தெய்வத்தன்மை  வாய்ந்த  வில்லினின்றும்  நான்
ஒலி பிறந்தது. அன்றெ - அசை.
 

நால்வகைப்  படையுள் தேர்ப்படை தனக்கென வீரம் உடையதன்று,
"தானை, யானை குதிரையென்ற நோனார் உட்கு மூவகை