என்றாலும், இனியேனும் ஐயனே! சீதையை முறைப்படி கொடுத்துவிட்டு; அவ் அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் - அந்தத் தரும நெறி செல்லும் சிந்தையராகிய இராமலக்குவரை அடைக்கலம் புகுவோமாக. |
இதுவரை நாம் உயிரோடிருப்பதே பெரிதென்பான் ‘உள்ளேம் இனி ஒரு பிறவி வந்து பிறந்தனம் ஆகின் உய்ந்தனம்’ என்றான். இராம இலக்குவர் சீதையைக் கொடுத்துவிட்டால் இன்னும் நம்மை உயிர்கொண்டு பிழைக்க அனுமதிக்கும் அருளாளர்கள் என்பதனை ‘அறம்தருசிந்தையோர்’ என்பதனால் குறித்தான். |
(6) |
8846. | ’வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து, வாரி வேலையை வென்று, கும்பகருணனை வீட்டினானை, ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின் வெல்வார்?- சூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத் தோளாய்! |
சூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத் தோளாய் - சூலப்படையை உடைய சிபெருமானை கயிலையினோடும் தூக்கி வெற்றி பொருந்திய தோள்களை உடையவனே! வாலியை வாளி ஒன்றால் வானிடைவைத்து - வாலியை அம்பு ஒன்றினால் கொன்று விண்ணுலகத்திற்கு அனுப்பிவிட்டு; வேலையை வென்று கும்பகருணனை வீட்டினானை - நீர் நிறைந்த கடலைச் சேது கட்டி வென்று, கும்பகருணனைக் கொன்றவனாகிய இராமனை; ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின் வெல்வார்? - மழைதுளியால் நீரில் தோன்றும் மொக்குளைப் போன்று விரைந்து அழியத் தக்க அரக்கரோ வெல்ல வல்லார்? |
‘நீ கயிலையைத் தூக்கிய ஆற்றலுடையவனாயினும் நின் வலிமைக்கு மேற்பட்ட மூன்று செயல்களைச் செய்து முடித்தவன் இராமன் என்கிறான் மாலியவான். |
(7) |
8847. | ‘மறி கடல் குடித்து, வானை மண்ணொடும் பறிக்க வல்ல எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும், |