சந்தக் கலிவிருத்தம் |
8859. | எண்ணின கோடிப் பல் படை யாவும், மண்ணுறு காவல் திண் மதில் வாயில், வெண் நிற மேகம் மின்இனம் வீசி நண்ணின போல்வ, தொல் நகர் நாண. |
எண்ணின் கோடிப் பல்படையாவும் - எழுபது வெள்ளம் என்று கணக்கிடப் பட்ட கோடிக்கணக்கான வானரப்படைகள் யாவும்; மண்ணுறு காவல் திண்மதில் வாயில் - அழகு செய்யப்பெற்றதும், காவலை உடையதுமாகிய திண்மையான மதிலின் வாயில் வழியாக; வெண்நிற மேகம் மின் இனம் வீசி - வெண்மையான நிறத்தை உடைய மேகங்கள் மின்னல்களை வீசிக் கொண்டு; தொல் நகர் நாண நண்ணின போல்வ - பழைமையான அந்த இலங்கை நகர் நாணும்படி நெருங்கின போல்வனவாயின. |
(20) |
8860. | ஆசைகள்தோறும் அள்ளின கொள்ளி, மாசு அறு தானை மர்க்கட வெள்ளம், ‘நாசம் இவ் ஊருக்கு உண்டு’ என, நள்ளின் வீசின, வானின் மீன் விழும் என்ன. |
மாசு அறுதானை மர்க்கடவெள்ளம் - குற்றம் அற்ற சேனையாகிய வானர வெள்ளம்; ஆசைகள் தோறும் கொள்ளி அள்ளின - திசைகள் தோறும் கொள்ளிக்கட்டைகளை அள்ளி; இவ் ஊருக்கு நாசம் உண்டு என - இவ்வூருக்கு அழிவு உண்டு என்று குறிக்க; வானின் மீன் விழும் என்ன நள்ளின் வீசின - வானத்திலிருந்து மீன்கள் விழுகின்றன என்னும் படியாக நள்ளிரவில் (அக்கொள்ளிகளை) வீசின. |
‘வானிலிருந்து விண்மீன் விழுதல் அரசுக்கு அழிவு எனும் நம்பிக்கை’ இங்கு குறிக்கப்பட்டதெனினும் அமையும். உற்பாதம் போல அமைந்தது என்று தற்குறிப்பேற்ற உவமையாம். |
(21) |
8861. | வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை, குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி, அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் செஞ் சரம் என்னச் சென்றன மென்மேல்.* |