அவ்விலங்கையின் செவியில் பட்டது; இலங்கை, சிறை அரவக் கலுழன் கொடு சீறும் - (அவ்வார்ப்பைக் கேட்டதனால்) இலங்கை சிறகுகளை உடைய கருடன் ஆராவாரங்கொண்டு சீறப்பெற்ற; இறை அரவக்குலம் ஒத்தது - சிதறின பாம்புக் கூட்டத்தை ஒத்தது. |
(27) |
அனுமன் முன்னிலையில் இந்திரசித்தன் மாயாசீதையைக் ‘கொல்வேன்’ எனல் |
8867. | மேல் திசை வாயிலை மேவிய வெங் கண் காற்றின் மகன்தனை வந்து கலந்தான்- மாற்றல் இல் மாயை வகுக்கும் வலத்தான், கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான். |
மாற்றல் இல் மாயை வகுக்கும் வலத்தான் - மாற்றமுடியாத மாயத்தைச் செய்யும் வலிமை பெற்றவனும்; கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் - எமனையும் வெற்றிகொண்டு உயர்ந்த வெற்றி உலாவை மேற்கொண்டவனுமாகிய இந்திரசித்தன்; மேல்திசை வாயிலை மேவிய வெங்கண் - மேலை வாயிலை அடைந்த கொடிய கண்ணையுடைய; காற்றின் மகன்தனை வந்து கலந்தான் - காற்றின் மகனாகிய அனுமனை வந்து நெருங்கினான். |
(28) |
8868. | சானகி ஆம்வகை கொண்டு சமைத்த மான் அனையாளை வடிக் குழல் பற்றா, ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான், ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான்: |
சானகி ஆம் வகை கொண்டு சமைத்த - சீதையாகும் வண்ணம் மாயை கொண்டு உருவாக்கிய; மான் அனையாளை வடிக்குழல் பற்றா - ஒருமான் போன்ற (மருட்சியை உடைய) பெண் ஒருத்தியின் திருந்திய கூந்தலினைப் பற்றியவனாய்;ஊன் நகு வாள் ஒரு கைக் கொடு உருத்தான் - மற்றொருகையால் தசை விளங்குகின்ற வாளினைப் பற்றியவனாய்ச் சினங்கொண்டு; ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் - தனது எண்ணத்தை நிறைவேற்ற முனைந்தவனாய் இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினான். |
(29) |